தாம்பரத்தில் மர்ம காய்ச்சலால் பள்ளி ஆசிரியை சாவு பன்றி காய்ச்சலா? என சுகாதாரதுறை அதிகாரிகள் விசாரணை


தாம்பரத்தில் மர்ம காய்ச்சலால் பள்ளி ஆசிரியை சாவு பன்றி காய்ச்சலா? என சுகாதாரதுறை அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 28 Dec 2018 11:00 PM GMT (Updated: 28 Dec 2018 7:42 PM GMT)

தாம்பரத்தில் மர்ம காய்ச்சலால் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார். அவர் பன்றி காய்ச்சலால் இறந்தாரா? என சுகாதார துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், காந்தி சாலையை சேர்ந்தவர் சந்திரகுமாரி (வயது 49). இவர், பழவந்தாங்கலில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர், பெங்களூருவில் தங்கி வேலை செய்துவரும் அவருடைய மகனை பார்ப்பதற்காக சென்று இருந்தார். கடந்த 23-ந் தேதி மீண்டும் பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி முதல் ஆசிரியை சந்திரகுமாரி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தாம்பரம் முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாக கூறி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு காய்ச்சல் அதிகமானதால், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ஆசிரியை சந்திரகுமாரி, பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

பெங்களூரு சென்றுவிட்டு வந்தபோது ஆசிரியை சந்திரகுமாரிக்கு பன்றி காய்ச்சல் தொற்று ஏற்பட்டு இருக்கலாம். மேலும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு உடலில் மற்ற பாதிப்புகளும் ஏற்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர்கள், சந்திரகுமாரிக்கு பன்றி காய்ச்சல் இருந்ததாக உறுதி செய்யவில்லை. எனவே ஆசிரியை சந்திரகுமாரி பன்றி காய்ச்சலால்தான் இறந்தாரா? அல்லது மர்ம காய்ச்சலா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story