நீதித்துறை சேவை மையம் மூலம் வழக்கின் முழு விவரங்களை அறியலாம் நீதிபதி பேச்சு


நீதித்துறை சேவை மையம் மூலம் வழக்கின் முழு விவரங்களை அறியலாம் நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 31 Dec 2018 10:45 PM GMT (Updated: 31 Dec 2018 7:42 PM GMT)

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல்-நீதித்துறை சேவை மையத்தை முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் திறந்து வைத்தார். அப்போது இந்த மையம் மூலம் வழக்கின் முழு விவரங்களையும் அறியலாம் என கூறினார்.

பெரம்பலூர்,

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழிகாட்டுதலின் பேரில் பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் மையம் மற்றும் நீதித்துறை சேவை மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் தலைமை தாங்கி சேவை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- இந்த ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் மையமானது நாளை(புதன்கிழமை) முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.

இந்த வளாகத்தில் உள்ள 9 நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டிய வழக்குகள் அனைத்தையும், இந்த மையத்தில் தாக்கல் செய்யலாம். இந்த மையத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் போது சி.என்.ஆர். எண் கொடுக்கப்படும். அந்த எண்ணை வைத்துக்கொண்டு நீதிமன்ற இணையதள சேவையான An-d-r-o-id IOS ap-p-l-i-c-at-i-on மூலமாகவும் இணையதள முகவரியுமான https://serv-i-ces.ec-ourts.gov.in மூலமாகவும் தங்களுடைய வழக்கு விவரத்தை அவ்வப்போது தெரிந்து கொள்ள முடியும்.

சி.என்.ஆர். எண்ணை 97668 99899 என்ற செல்போன் எண்ணிற்கு அனுப்பினாலும் வழக்கின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் வழக்கு விவரங்கள், வாதாடும் வக்கீல்கள் ஆகியோரின் செல்போன் எண் மற்றும் இணையதள முகவரி கொடுக்கப்பட்டிருந்தால் அதன் வழியாகவும் வழக்கின் அவ்வப்போதைய நிலை அனுப்பப்படும். இதன் மூலமாக வழக்கின் ஆரம்ப நிலை முதல் இறுதி நிலை வரை அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.

நீதிமன்றத்திற்குள் வரும் எந்தவிதமான ஆவணமாக இருந்தாலும், இந்த மையத்தில் பதியப்பட்ட பிறகே உரிய நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) சார்ஜ் சீட், கேவிட் போன்றவைகளும் தாக்கல் செய்யப்பட்டிருக்கும்போது, அதனுடைய நிலைகளையும் இந்த மையத்தின் வழியாக தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பெரம்பலூர் மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், தலைமை நீதித்துறை நடுவர் முரளதரன், சார்பு நீதிபதிகள் ஸ்ரீஜா, வினோதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கருப்பசாமி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மோகனப்பிரியா, நீதித்துறை நடுவர் அசோக்பிரசாத் மற்றும் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் வள்ளுவன்நம்பி, அட்வகேட்ஸ் அசோசியேஷன் தலைவர் முகமது இலியாஸ் உள்பட வக்கீல்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதற் கான ஏற்பாடுகளை கணினி பகுப்பாய்வாளர் இயேசுபாலன், உதவி கணினி பகுப்பாய்வாளர் ஜெய்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிலையில் நீதிபதி பால ராஜமாணிக்கம் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

Next Story