புத்தாண்டையொட்டி கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது


புத்தாண்டையொட்டி கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 1 Jan 2019 10:30 PM GMT (Updated: 1 Jan 2019 2:46 PM GMT)

குமரி மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாகர்கோவில்,

ஆங்கில புத்தாண்டு பிறப்பு குமரி மாவட்டத்தில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்துக்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து தங்களது வீடுகளின் வாசலில் கோலமிட்டு புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலையில் நடை திறந்ததில் இருந்தே கோவிலுக்கு மக்கள் வரத் தொடங்கினர். இதனால் கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாகர்கோவிலை பொறுத்த வரையில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், அழகம்மன் கோவில், வடசேரி காசி விஸ்வநாதர் ஆலயம், கிருஷ்ணன் கோவில், சோழராஜா கோவில், மகாதேவர் ஆலயம், பார்வதிபுரம் அய்யப்பன் கோவில், புலவர்விளை முத்தாரம்மன் கோவில் ஆகிய கோவில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நீண்ட வரிசை

நாகராஜா கோவிலுக்கு வெளியூர் மக்களும் வந்து சாமி தரிசனம் செய்தனர். வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சாமி தரிசனம் செய்ய சிறிது நேரம் ஆகியது. எனினும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.

இதே போல கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், சாமிதோப்பு அய்யா வைகுண்டர்தலைமைபதி, திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்தனர். அனைவரும் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை வழிபட்டனர்.


Next Story