பெரம்பலூர், அரியலூரில் கேக்வெட்டி புத்தாண்டை வரவேற்ற இளைஞர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெரம்பலூர், அரியலூரில் கேக்வெட்டி புத்தாண்டை வரவேற்ற இளைஞர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 1 Jan 2019 10:45 PM GMT (Updated: 1 Jan 2019 5:01 PM GMT)

பெரம்பலூர், அரியலூரில் கேக்வெட்டி புத்தாண்டை இளைஞர்கள் வரவேற்றனர். மேலும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெரம்பலூர்,


2018–ம் ஆண்டு முடிவடைந்து நேற்று 2019 புத்தாண்டு தொடங்கியது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக பெரம்பலூரில் உள்ள பெரும்பாலான தெருக்களில் சிறுவர்– சிறுமிகள், கல்லூரி மாணவ– மாணவிகள், இளைஞர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு ஒன்று கூடினர். நள்ளிரவு கடிகாரத்தில் 12 மணியை தொட்ட உடனே பலூன்களை பறக்கவிட்டும், வெடிவெடித்தும், கேக்வெட்டியும் கொண்டாடினர். பிறகு ஒருவருக்கு ஒருவர் கேக்கை ஊட்டிவிட்டு புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சங்குப்பேட்டை, எளம்பலூர் சாலை, துறையூர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் இளைஞர்கள் வெள்ளை பெயிண்டால் வாழ்த்துச்செய்திகளை எழுதிவைத்தனர். பெண்கள் தங்களது வீடுகளில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவு நேரத்தில் ஆர்வத்துடன் வண்ணவண்ண கோலங்களை போட்டனர். மேலும் பலர் வாட்ஸ்– ஆப் மற்றும் முகநூல்களில் தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை நள்ளிரவு முதலே பகிர்ந்துகொண்டனர்.


புத்தாண்டு தினத்தில் வழக்குகள் பதிவு செய்வதை தவிர்க்கவும், விபத்துகள் மற்றும் புத்தாண்டை கொண்டாடும் நோக்கத்தில் விரும்பத்தகாத சம்பவங்களை நிகழ்வதை தடுக்கவும் மாவட்ட போலீஸ் அதிகாரி திஷாமித்தல் தலைமையில் போலீசார் பெரம்பலூர் நகரம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

காமராஜர் சிக்னல், கிறிஸ்தவ ஆலயங்கள், கோவில்கள். பஸ் நிலையங்கள், கடைவீதி உள்ளிட்ட பிரதான இடங்களில் போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அதிகவேகமாக சென்றால் அவர்களை தடுத்து நிறுத்தி சீரான வேகத்தில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.


பெரம்பலூர் சங்குப்பேட்டையில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புத்தாண்டை கொண்டாடும் வகையில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அதிக வேகமாக வந்தனர். போலீசார் அந்த வண்டியை தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த வாலிபர்கள் வேகத்தை கட்டுப்படுத்தாமல் சங்குப்பேட்டை பகுதியில் ஒரு தெருவில் நுழைந்தனர். போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர்.

 அப்போது ரத்தினவேல் என்பவரது மகள் சோஷிலா(வயது 6) மீது அந்த மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. உடனே அந்த வாலிபர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சோஷிலா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய அந்த 2 வாலிபர்களையும் தேடிவருகின்றனர்.


பெரம்பலூரில் புத்தாண்டு பிறப்பையொட்டி, மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில், பிரம்மபுரீஸ்வரர் உடனுறை ஸ்ரீஅகிலாண்டேசுவரி கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி மூலவர்களுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன், வடக்குமாதவி சாலையில் உள்ள சவுபாக்கிய விநாயகர், தெப்பக்குளம் அருகே உள்ள அய்யப்பசாமி, பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தனி சமேத பஞ்சநதீஸ்வரர், வெங்கனூர் விருத்தாசல ஈஸ்வரர், வாலிகண்டபுரத்தில் உள்ள வாலீஸ்வரர், எஸ்.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தவர், சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளிஅம்மன், செட்டிகுளத்தில் மலைக்குன்றின் மீதுள்ள தண்டாயுதபாணி, செட்டிகுளத்தில் உள்ள குபேர ஸ்தலமான ஏகாம்பரேசுவரர், பெரம்பலூரில் தீரன்நகரில் எதிரில் சீரடி சாய்பாபா உள்பட பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


இதேபோல் பெரம்பலூரில் உள்ள தூய பனிமயமாதா ஆலயம், பெரம்பலூர்– ஆத்தூர் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி. தூய யோவான், குரும்பலூர் பாளையத்தில் உள்ள பழமையான புனித சூசையப்பர் ஆலயம் உள்பட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.


இதேபோல் அரியலூரில் ஆங்கில புத்தாண்டையொட்டி அரியலூரில் உள்ள பெருமாள் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், முருகன், பிள்ளையார், மாரியம்மன், பெரிய நாயகி அம்மன், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள், முருகன், ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், ஆபத்துகாத்த விநாயகர், வரதராஜபெருமாள், சாமுண்டீஸ்வரி, செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மேலும் அரியலூரில் உள்ள ஆர்.சி, சி.எஸ்.ஐ சர்ச், ஜெயங்கொண்டம் புனிதபாத்திமா அன்னை ஆலயம், வடவீக்கம் உபகார அன்னை, விழப்பள்ளம் செபஸ்தியார், அகினேஸ்புரம் அகினேசம்மாள், கீழ்நெடுவாய் புனித அன்னம்மாள், தா.பழூர் அருகே உள்ள நடுவலூர் சூசையப்பர், கீழமைக்கேல்பட்டி ஆலயம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் பங்குதந்தையர்கள் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலிகள் நடத்தப்பட்டது.

Next Story