குமாரபாளையத்தில், புத்தாண்டு முதல் ‘மது குடிக்க மாட்டோம்’ என போலீசாரிடம் சத்தியம் செய்த இளைஞர்கள்


குமாரபாளையத்தில், புத்தாண்டு முதல் ‘மது குடிக்க மாட்டோம்’ என போலீசாரிடம் சத்தியம் செய்த இளைஞர்கள்
x
தினத்தந்தி 1 Jan 2019 11:00 PM GMT (Updated: 1 Jan 2019 7:38 PM GMT)

குமாரபாளையத்தில் புத்தாண்டு முதல், மது குடிக்க மாட்டோம் என ‘அவன் இவன்’ சினிமா பாணியில் போலீசாரிடம் இளைஞர்கள் சத்தியம் செய்த ருசிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் குமாரபாளையம் கோட்டைமேடு பைபாஸ் ரோட்டில் விபத்தில்லா புத்தாண்டாக அமைய காவல்துறை சார்பில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆடல், பாடலுடன் புத்தாண்டை வரவேற்றனர்.

அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம், ‘இந்த ஆண்டு விபத்து இல்லாத ஆண்டாக அமையும் வகையில் ஒவ்வொருவரும் இனிமேல் மது குடிக்க மாட்டோம் என்றும், மது குடித்து விட்டு வாகனங்களை ஓட்ட மாட்டோம்’ என்றும் சத்தியம் பெற்றனர்.

ஒரு சிலர் தாங்கள் இனி நல்லெண்ணத்துடன் இருப்போம் என்றும், எங்கள் குடும்ப நலனுக்காகவும் இனிமேல் புத்தாண்டில் இருந்து மது குடிக்க மாட்டோம் என சத்தியம் செய்தனர். காவல் துறை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த புத்தாண்டு நிகழ்ச்சி பார்ப்போரையும், பொதுமக்களையும் நெகிழ செய்தது.

பின்னர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஏற்படும் விபத்து, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ஏற்படும் விபத்து மற்றும் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து குறித்து பல்வேறு படக்காட்சிகள் மூலம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டைரக்டர் பாலா இயக்கத்தில், நடிகர்கள் விஷால், ஆர்யா நடித்து வெளிவந்த ‘அவன் இவன்’ திரைப்படத்தில் போலீஸ்காரர்கள் ரவுடிகளை எல்லாம் அழைத்து கறி சாப்பாடு போட்டு இனிமேல் குடிக்க மாட்டோம், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டோம் என சத்தியம் பெறுவார்கள்.

இதேபோல குமாரபாளையத்தில் போலீசார் மதுகுடிப்பவர்களிடம் புத்தாண்டு முதல் குடிக்க மாட்டோம் என சத்தியம் பெற்ற ருசிகர சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. சமூக ஆர்வலர்கள் குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி உள்ளிட்ட போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர். 

Next Story