புத்தாண்டையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


புத்தாண்டையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 1 Jan 2019 10:45 PM GMT (Updated: 1 Jan 2019 9:36 PM GMT)

புத்தாண்டையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

பென்னாகரம்,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவியில் குளித்தும், பரிசலில் நண்பர்கள், குடும்பத்துடன் சென்றும் மகிழ்வார்கள்.

இந்த நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக இருந்தது.

அருவியில் குளித்து மகிழ்ந்தனர்

நேற்று புத்தாண்டு விடுமுறை என்பதால் புதுவருடத்தை கொண்டாட ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் பலர் பாதுகாப்பு உடை அணிந்து பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

பின்னர் தொங்கு பாலம், முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை பார்த்து மகிழ்ந்தனர். மெயின் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பார்வை கோபுரம், தொங்கு பாலம் ஆகியவற்றின் வழியே சென்று ரசித்தனர். தங்களது செல்போன்களில் காவிரியின் இயற்கை அழகை படம் பிடித்தனர்.

ஒகேனக்கல்லுக்கு நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருந்ததால் மீன் கடைகளில் விற்பனை படுஜோராக இருந்தது. போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் இருந்தனர்.

Next Story