பராமரிப்பின்றி கிடந்த பழைய போலீஸ் நிலைய வளாகத்தை சுத்தம் செய்த இன்ஸ்பெக்டர்


பராமரிப்பின்றி கிடந்த பழைய போலீஸ் நிலைய வளாகத்தை சுத்தம் செய்த இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 2 Jan 2019 11:00 PM GMT (Updated: 2 Jan 2019 7:39 PM GMT)

பராமரிப்பின்றி கிடந்த பழைய போலீஸ் நிலைய வளாகத்தை திருமானூர் இன்ஸ்பெக்டர் சுத்தம் செய்து கொடுத்தார்.

கீழப்பழுவூர்,

அரியலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமானூர் போலீஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. பின்னர், அந்த போலீஸ் நிலையத்திற்கு திருமானூரிலேயே வேறோரு இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது அதில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதனால், பழைய போலீஸ் நிலையம் பராமரிப்பின்றியும், செடி, கொடிகள் வளர்ந்து, புதர் மண்டி கிடந்தது. அந்த இடத்தை சுத்தம் செய்து வேறு ஏதேனும் நூலகம் அல்லது உடற்பயிற்சி கூடமாக அமைத்து தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடமும், திருமானூர் போலீசாரிடம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் திருமானூர் போலீஸ் நிலையத்துக்கு புதிதாக வந்திருந்த இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வனிடம் இதுகுறித்து எடுத்து கூறப்பட்டது. அதன்பேரில், அவர் பழைய போலீஸ் நிலையம் செயல்பட்ட வளாகத்தை பார்வையிட்டு அதனை தாமே சுத்தம் செய்ய முன்வந்தார்.அதன்படி, இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மேனகா, நந்தகுமார், ஜென்கின்ராஜ் மற்றும் போலீசார் உள்பட பொதுமக்கள் ஒன்றிணைந்து போலீஸ் நிலைய வளாகத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். பின்னர் அங்கிருந்த இரும்பு தடுப்புகளை அகற்றினர். பின்னர், சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் செம்மண் கொட்டி சமப்படுத்தி மைதானம் போன்று அமைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டரின் இந்த முயற்சியை அந்தப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story