பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு மக்களிடையே வரவேற்பு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சிறு வணிகர்கள் கடையடைப்பு


பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு மக்களிடையே வரவேற்பு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சிறு வணிகர்கள் கடையடைப்பு
x
தினத்தந்தி 2 Jan 2019 11:00 PM GMT (Updated: 2 Jan 2019 7:54 PM GMT)

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவு பெரம்பலூர் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

பெரம்பலூர்,

ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் டம்ளர்கள், கப்புகள், பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு நீர்நிலைகளும் மாசுபட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் விதமாக 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த இம்மாதம் 1-ந் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை உத்தரவுக்கு பெரம்பலூர் மாவட்ட மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சாலையோர உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு பெரிதும் குறைந்தது. பிளாஸ்டிக் பேப்பர்களை தவிர்த்து வாழை இலைகளில் உணவு பரிமாறப்படுகிறது. அதேபோல் பார்சல் கேட்டு வருவோரிடம் பாத்திரங்களை கொண்டு வருமாறு கடைக்காரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதனால், வீடுகளில் இருந்து பாத்திரங்களை கொண்டு வந்து உணவு வகைகளை வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர். இதே போல் கடைகளுக்கு மஞ்சள் பை, துணிப்பைகள் மற்றும் கூடைகளை எடுத்து வந்து காய்கறி மற்றும் மளிகை பொருட்களை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

டீக்கடைகளில் பெரும்பாலும் கண்ணாடி டம்ளர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பெரம்பலூர் மாவட்ட வணிகர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் கடைக்கு வரும்போது துணிப்பைகள் மற்றும் பாத்திரங்களை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருந்தாலும், 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறியும், இந்த தடை உத்தரவை நீக்கக்கோரியும் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் பெரம்பலூரில் உள்ள பிளாஸ்டிக் விற்பனை செய்யும் கடைகள் நேற்று முன்தினம் முதல் அடைக்கப்பட்டது. 

Next Story