ஜல்லிக்கட்டு ரத்து எதிரொலி: நடுரோட்டில் காளைகளை அவிழ்த்து விட்ட இளைஞர்கள்


ஜல்லிக்கட்டு ரத்து எதிரொலி: நடுரோட்டில் காளைகளை அவிழ்த்து விட்ட இளைஞர்கள்
x
தினத்தந்தி 2 Jan 2019 11:00 PM GMT (Updated: 2 Jan 2019 8:03 PM GMT)

ஜல்லிக்கட்டு ரத்து எதிரொலியால் நடுரோட்டில் காளைகளை இளைஞர்கள் அவிழ்த்து விட்டனர்.

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சன்குறிச்சி கிராமத்தில் புனித அடைக்கல மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி 1-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்ததால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவில்லை. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு போராட்டங்கள் நடந்ததை தொர்ந்து தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றியதால் ஜல்லிக்கட்டு நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்நிலையில் 2019-ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி தச்சன்குறிச்சியில் நடத்தப்படுவதாக இருந்தது. இதற்காக பல லட்ச ரூபாய் செலவில் வாடிவாசல், விருந்தினர் மேடை, பார்வையாளர்கள் பாதுகாப்புடன் அமர்ந்திருக்க கேலரி அங்குள்ள திடலில் அமைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு 850 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதனால் தச்சன்குறிச்சி கிராமமே களைகட்டி இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. தமிழ் மாதமான தை அன்று தான் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அதற்கு முன்பாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்தார். இதனால் விழாக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து ஜல்லிக்கட்டு போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

மேலும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வந்த மாடுபிடி வீரர்கள், காளைகளை கொண்டு வந்தவர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையே ஜல்லிக்கட்டு போட்டியை ரத்து செய்தது தெரியாமல் இளைஞர்கள் பலர் நேற்று காளைகளை ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்தனர். வந்த பிறகு தான் தெரிந்தது போட்டி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அழைத்து வந்த காளைகளை நடுரோட்டில் அவிழ்த்து விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் மற்றும் போலீசார் ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டது குறித்து விளக்கி கூறினர். இதையடுத்து அனைவரும் காளைகளுடன் கவலையுடன் திரும்பி சென்றனர். மேலும் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று ஆவலுடன் வந்த பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

Next Story