குடிநீர் குழாயை உடைத்து தண்ணீர் எடுக்க முயற்சி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை–பரபரப்பு


குடிநீர் குழாயை உடைத்து தண்ணீர் எடுக்க முயற்சி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை–பரபரப்பு
x
தினத்தந்தி 3 Jan 2019 11:00 PM GMT (Updated: 3 Jan 2019 2:39 PM GMT)

சுசீந்திரம் அருகே குடிநீர் குழாயை உடைத்து தண்ணீர் எடுக்க முயன்றனர். இதையடுத்து சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுசீந்திரம்,

சுசீந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வழுக்கம்பாறை, சகாயபுரம், மணவிளை, சிதம்பரபுரம், கரையான்குழி போன்ற பகுதிகளுக்கு பேரூராட்சி சார்பில் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக மணவிளையில் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு, தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கான குடிநீர் குழாய்கள் வழுக்கம்பாறை பகுதியில் சாலையோரம் பதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழுக்கம்பாறை பகுதியில் சில நபர்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு குண்டு தோண்டி குழாய் பதித்தனர். அத்துடன் தண்ணீர் செல்லும் முக்கிய குழாயை உடைத்து இணைப்பு கொடுக்க தயாரானார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த வழுக்கம்பாறை, சகாயபுரம், மணவிளை, சிதம்பரபுரம், கரையான்குழி போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலையில் சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் பகுதிக்கு வரும் குடிநீர் குழாயை உடைத்து, பக்கத்து ஊராட்சி மக்கள் தண்ணீர் எடுக்க முயல்வதாக புகார் கூறினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக அவர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோசிடம் மனு கொடுத்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், முன்னாள் தலைவர் முருகேஷ், பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் வழுக்கம்பாறை பகுதிக்கு சென்றனர். தொடர்ந்து, பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தோண்டப்பட்ட குண்டு மூடப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் நிலவிய பரபரப்பு அடங்கியது.

இந்த சம்பவம் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின்ஜோஸ் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story