கணக்கெடுக்கும் பணியை தனியாருக்கு தர எதிர்ப்பு: மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்


கணக்கெடுக்கும் பணியை தனியாருக்கு தர எதிர்ப்பு: மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 3 Jan 2019 9:45 PM GMT (Updated: 3 Jan 2019 9:21 PM GMT)

மின்சார பயன்பாட்டினை கணக்கெடுக்கும் பணியினை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரி,

மின்துறை ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கக்கூடாது, ஒருநபர் குழு சிபாரிசு அடிப்படையிலான ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும், நிர்வாகம் உறுதியளித்தபடி அனைத்து காலி பணியிடங்களையும் பதவி உயர்வு மூலம் நிரப்பவேண்டும், மின்மீட்டர் ரீடிங் (கணக்கீடு) எடுக்கும் பணியினை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, நியமன விதிகளுக்கு புறம்பாக பணியமர்த்தப்பட்ட கட்டுமான உதவியாளர்களின் பணி ஆணையினை ரத்து செய்யவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை புதுவை மின்துறை அனைத்து சங்கங்களின் போராட்டக்குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளுக்காக நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். இதில் மின் கணக்கீட்டாளர்கள், கட்டணம் வசூலிப்போர், தொழில்நுட்ப பணியாளர்கள் என 1,500 பேர் ஈடுபட்டுள்ளனர்.

மின்துறை தலைமை அலுவலக வளாகத்தில் கூடிய மின்துறை ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினார்கள். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராமசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜேந்திரன், வேல்முருகன், மதிவாணன், உத்திராடம், பரத்குமார், திருமூர்த்தி, பக்தவச்சலம், ராஜாராமன், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஊழியர்களின் போராட்டம் காரணமாக மின்கட்டண கணக்கெடுப்பு, மின் கட்டணம் வசூலிப்பது, பழுது பார்ப்பது உள்ளிட்ட பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. நாள்தோறும் மின் கட்டணமாக ரூ.5 கோடி வரை வசூலிப்பது முடங்கியுள்ளது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மாவட்டத்திலும் மின்துறை ஊழியர்கள் நேற்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தின் ஒரு பகுதியாக காரைக்கால் மின்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி மின்துறை அனைத்து சங்கங்களின் போராட்டக்குழு நிர்வாகிகள் பழனி, வேல்மயில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story