தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 1,225 பேர் கைது


தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 1,225 பேர் கைது
x
தினத்தந்தி 3 Jan 2019 11:00 PM GMT (Updated: 3 Jan 2019 9:23 PM GMT)

உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டம் செய்த 1,225 மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

மலைக்கோட்டை,

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

கடந்த சில நாட்களாக மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மின்கம்பத்தை தோளில் தூக்கி வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் நேற்று சிந்தாமணி அண்ணாசிலை அருகே மாநில அளவில் உண்ணாவிரதம் இருக்க போலீசாரிடம் அனுமதி கேட்டனர். அண்ணாசிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று கூறி போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து நேற்று காலை அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ராஜராஜேந்திரன் தலைமையில் மின்வாரிய ஒப்பந்த தொழி லாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், போலீசார் விதித்த தடையை மீறியும் அண்ணாசிலை அருகே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர்.

இதையொட்டி சிந்தாமணி அண்ணாசிலை, சத்திரம் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடையை மிறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற பெண்கள் உள்பட 1,225 பேரை கைது செய்து போலீஸ் வேன்களில் ஏற்றி சென்று அருகில் உள்ள 4 திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் நேற்று அண்ணா சிலை பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

Next Story