பள்ளிக் குழந்தைகளுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தப்பட்ட சீருடைகள்


பள்ளிக் குழந்தைகளுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தப்பட்ட சீருடைகள்
x
தினத்தந்தி 5 Jan 2019 11:18 AM GMT (Updated: 5 Jan 2019 11:18 AM GMT)

சீனாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தப்பட்ட சீருடைகளை வழங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

சீனாவின் தென்பகுதியில் உள்ள குயிஷூ மற்றும் குயான்சி மாகாணங்களில் படிக்கும் குழந்தைகளின் சீருடை அதிநவீன மயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் அணியும் சீருடையில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் அணியும் ஜாக்கெட்டின் தோள்பட்டையில் 2 மைக்ரோசிப்கள் வைத்துத் தைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பள்ளியில் நுழைந்தவுடன் மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ள சீருடைகள் அவர்களை போட்டோ அல்லது வீடியோ எடுக்க உதவிபுரியும்.

மேலும் பள்ளியில் இருந்து குழந்தைகள் மாயமானாலோ அல்லது வெளியேறினாலோ வகுப்பறையில் அலாரம் அடிக்கும். அதன் மூலம் குழந்தைகளின் நடவடிக்கையைக் கண்காணிக்க முடியும்.

ஆசிரியர் பாடம் நடத்தும்போது குழந்தைகள் தூங்கினால் கூட அலாரம் அடிக்கும். மேலும் ஆள்மாறாட்டம் செய்து பள்ளிக்குள் நுழைய முடியாதபடி முக அடையாளத்தை ஸ்கேன் செய்யும் வசதியும் மைக்ரோசிப்பில் இடம் பெற்றுள்ளது.

இவை தவிர, செல்போனில் உள்ள ‘ஆப்’ மூலம் பெற்றோர் வீட்டில் இருந்தபடியே தங்களது குழந்தைகளின் நடவடிக்கையை அறிய முடியும்.

இதன் காரணமாக பள்ளிக்கு வரும் குழந்தைகளின் வருகைப்பதிவு அதிகரித்துள்ளது என்று பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு சீனாவில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

Next Story