அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது திருவாரூர் தேர்தல் தள்ளிவைக்கப்படுமா?


அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது திருவாரூர் தேர்தல் தள்ளிவைக்கப்படுமா?
x
தினத்தந்தி 5 Jan 2019 11:15 PM GMT (Updated: 5 Jan 2019 6:58 PM GMT)

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை பற்றிய அறிக்கை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டது. இதனால் அந்த தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

திருவாரூர்,

திருவாரூர் சட்ட சபை தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல்

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. வருகிற 10-ந் தேதியுடன் மனு தாக்கல் முடிவடைகிறது.

இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுகிறார். அ.ம.மு.க. வேட்பாளராக எஸ்.காமராஜ் அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆளும் அ.தி.மு.க. இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.

தொகுதியில் கட்சிகளின் தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன.

ஒத்திவைக்க கோரிக்கை

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நேற்று முன்தினம் டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் ஆரோராவை நேரில் சந்தித்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில் இன்னும் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, அந்த மனுவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு அனுப்பிவைத்த தேர்தல் கமிஷன், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து சனிக்கிழமை(அதாவது நேற்று) மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

கருத்து கேட்பு கூட்டம்

அதன்பேரில் சத்யபிரதா சாகு, தொகுதியில் தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தி அறிக்கை வழங்குமாறு திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான நிர்மல்ராஜை கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நேற்று தனது அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்டி அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்தார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்த நிர்மல்ராஜ், “நீங்கள் தெரிவித்த கருத்துகள் தலைமை தேர்தல் கமிஷனரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என்று கூறினார்.

தி.மு.க.

கூட்டம் முடிந்து வெளியே வந்த தி.மு.க. முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயலால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என டி.ராஜா எம்.பி. கோரிக்கை வைத்ததன் தொடர்ச்சியாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் புயலால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து விட்டனர். வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள்கூட இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதை எல்லாம் உடனடியாக சரி செய்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் நாங்கள் வலியுறுத்தினோம்.

தேர்தல் அவசியம் இல்லை என்று நாங்கள் கூறவில்லை. நிவாரண பணிகளை முடித்து விட்டு தேர்தலை நடத்தலாம். மற்ற இயக்கங்களை சேர்ந்தவர்களும் தேர்தலை நடத்தக்கூடாது என வலியுறுத்தி உள்ளனர். புயலால் முழுமையாக பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் இப்போது தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் என்ன? அ.தி.மு.க.வினரே இடைத்தேர்தல் இப்போது தேவையில்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி கூறியதாவது:-

புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறார்கள். நிவாரண பணிகளை அரசு முழுமையாக முடிக்கவில்லை. கணக்கெடுப்பு பணி கூட இன்னும் முழுமையாக முடியவில்லை என சட்டசபையில் முதல்-அமைச்சரே கூறி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் திடீரென இடைத்தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது தான் திருவாரூர் மாவட்ட மக்களின் கருத்தாக இருக்கிறது. இதை எங்கள் கட்சியின் கருத்தாக பதிவு செய்தோம். திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவித்து இருப்பதில் சூழ்ச்சி இருப்பதாக தெரிகிறது. காலியாக உள்ள மற்ற 19 தொகுதிகளுடன் சேர்த்து திருவாரூருக்கு தேர்தல் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ்

திருவாரூர் நகர காங்கிரஸ் தலைவர் சம்பத் கூறும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கருத்தை நாங்களும் ஆதரிக்கிறோம் என்றார்.

புயல் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் தற்போது தேர்தல் தேவை இல்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் எனவும் தங்களது கருத்துகளை கூட்டத்தில் பதிவு செய்ததாக அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர். ஆனால் இது தொடர்பாக பேட்டி எதுவும் அளிக்க மறுத்து விட்டனர்.

இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை.

தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை

இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் பற்றிய அறிக்கையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான நிர்மல்ராஜ் அனுப்பினார்.

அந்த அறிக்கையை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனுக்கு சத்யபிரதா சாகு நேற்று மாலை அனுப்பிவைத்தார். இதனால் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய அறிக்கையை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து, திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தலாமா? வேண்டாமா? என்பது பற்றி முடிவு செய்யும்.

Next Story