தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை: சிறுவன் உள்பட 7 பேர் கைது; அண்ணன் மனைவிக்கு வலைவீச்சு


தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை: சிறுவன் உள்பட 7 பேர் கைது; அண்ணன் மனைவிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Jan 2019 11:00 PM GMT (Updated: 5 Jan 2019 7:19 PM GMT)

தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை சொத்து தகராறில், அவருடைய உறவினர்களே தீர்த்து கட்டியது போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்த வழக்கில் சிறுவன் உள்பட 7 பேரை கைது செய்துள்ள போலீசார், அவருடைய அண்ணன் மனைவியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஆண்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமிபிள்ளை. இவருடைய மகன் கோபால் சங்கர்(வயது 43). தி.மு.க.வை சேர்ந்த இவர், பள்ளத்தூர் பகுதியின் ஒன்றியக்குழு முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

கடந்த 3-ந் தேதி இவர் சொத்துப்பிரச்சினை தொடர்பாக பட்டுக்கோட்டை கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கில் ஆஜராகி விட்டு, வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

ஆண்டிக்காடு அருகே பள்ளத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அவரை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இதுதொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெளிவந்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

கோபால் சங்கருக்கும், அவருடைய அண்ணன் மனைவி உஷாராணி, அக்காள் வள்ளியம்மை(45), வள்ளியம்மையின் கணவர் அன்பரசன் (51) ஆகியோருக்கும் இடையே பல ஆண்டுகளாக சொத்துப்பிரச்சினை இருந்து வந்தது.

உஷாராணி, பட்டுக்கோட்டை கண்டியன் தெருவை சேர்ந்த சிவானந்தம் என்பவருக்கு தனக்குரிய சொத்தை எழுதி வைத்தார். இதனால் சிவானந்தம், கோபால் சங்கர் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

சொத்துப்பிரச்சினை தொடர்பான வழக்கு பட்டுக்கோட்டை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உஷாராணி, அன்பரசன் ஆகியோர் திட்டம் தீட்டி சிவானந்தம் மூலமாக கூலிப்படையை ஏவி, கோபால் சங்கரை கொலை செய்து உள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், கோபால் சங்கரின் அக்காள் வள்ளியம்மை, அவருடைய கணவர் அன்பரசன், செந்தில்குமார்(45), ராஜதுரை(35), கதிரவன்(18), சிவானந்தம் மனைவி கண்ணகி(38) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 7 பேரை கைது செய்தனர். கொலைக்காக இவர்கள் பயன்படுத்திய 2 கார்கள் மற்றும் அரிவாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

முன்னதாக இந்த வழக்கில் சிவானந்தம், திருச்சி கோர்ட்டில் கடந்த 3-ந் தேதி சரண் அடைந்தார். தலைமறைவாக உள்ள உஷாராணியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தி.மு.க. முன்னாள் கவுன் சிலர் கோபால் சங்கரை, சொத்து தகராறில் உறவினர் களே கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story