பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால்: கரூரில் சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் பணி தீவிரம்


பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால்: கரூரில் சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 5 Jan 2019 10:30 PM GMT (Updated: 5 Jan 2019 8:47 PM GMT)

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் கரூரில் சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கரூர்,

நாம் வசிக்கும் வீட்டினை பாதுகாத்து பராமரித்து அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வதில் முனைப்புடன் தான் இருக்கிறோம். அந்த வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி வீட்டிற்கு சுண்ணாம்புக்கல்லை தண்ணீரில் நீர்த்து வைத்து வெள்ளையடிப்பதை காலம் காலமாக கடைபிடித்து வருகிறோம். ஆனால் தற்போது நாகரிகவளர்ச்சிக்கேற்ப பெயிண்டு உள்ளிட்டவற்றால் வீட்டிற்கு வண்ணம் பூச தொடங்கி விட்டோம். இதனால் கரூர் பண்டுதகாரன்புதூர், க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் தொழில் நலிவடைந்து வருகிறது. எனினும் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் கிராமப்புற மக்கள் வீட்டிற்கு வெள்ளையடிக்க பயன்படுத்தும் பொருட்டு சுட்ட சுண்ணாம்புக்கல்லை தேடிப்பிடித்து வாங்கி செல்கின்றனர். அந்த வகையில் கரூர் அருகேயுள்ள பண்டுதகாரன்புதூரில் சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் பணியில் அமுதா (வயது 55) மற்றும் சண்முகம் (65) உள்ளிட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு மூட்டை சுண்ணாம்புக்கல் ரூ.140 என்கிற வகையில் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளையடிப்பதை தவிர்த்து, சுண்ணாம்புசத்து குறைவாக உள்ள கால்நடைகளுக்கு மருந்து தயாரிக்கவும், ஆட்டுமந்தையில் நோய் கிருமிகள் உள்ளிட்டவை தாக்காமல் தடுக்கவும், பட்டுப்பூச்சி வளர்ப்புக்கும் கூட விவசாயிகள் உள்ளிட்டோர் இந்த சுண்ணாம்புக்கல் மூட்டையினை வாங்கி சென்று பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் சுண்ணாம்புக்கல் தயாரிப்பு குறித்து அமுதா உள்ளிட்ட தொழிலாளர்களிடம் கேட்ட போது கூறுகையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி, காங்கேயம் மற்றும் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சுண்ணாம்புக்கல் கலந்த மண்ணை வெட்டி எடுத்து வாங்கி வருகிறோம். பின்னர் செம்மண்ணாலான சூளையில் அடுப்புக்கரி, தேங்காய்நார், மட்டை உள்ளிட்டவற்றை போட்டு, அதன் மீது சுண்ணாம்புக்கல் மண்ணை கொட்டி வெப்பப்படுத்துவோம். பின்னர் இதில் மணல் தனியாக பிரிந்து கழிவாக வெளியேறிவிடுகிறது. சுண்ணாம்பானது வெப்பத்தினால் வேக வைக்கப்பட்டு தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது.

இத்தகைய சுண்ணாம்புக்கல்லினை தண்ணீரில் நீர்த்து வீட்டிற்கு வெள்ளைடித்தால் பூச்சிகள் உள்ளிட்டவை அண்டுவதில்லை. மேலும் வீட்டின் உள்புறத்தில் வெளிச்சம் நன்றாக கிடைக்கும். சிமெண்டு உள்ளிட்டவை வருவதற்கு முன்பு சுண்ணாம்பு கலந்த மண்ணை தான் வீடு கட்ட பயன்படுத்தினர். அது பல ஆண்டுகள் கடந்த பின்னும் கம்பீரமாக காட்சியளிப்பதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் வெள்ளையடிக்கும் சுட்ட சுண்ணாம்புக்கல்லுக்கு தற்போதும் கூட மவுசு குறைவதில்லை. தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் சறுக்கலை சந்தித்த போதிலும் கூட, குலத்தொழிலை விட மனமின்றி தொடர்ந்து செய்து வருகிறோம். எனவே சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதார பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தொழில் கடன், இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்டவை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொருளே சுண்ணாம்புக்கல் ஆகும். இதனை சிமெண்டு தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறோம். தமிழகத்தை பொறுத்தவரையில் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகளவில் சுண்ணாம்புக்கற்களும், சிமெண்டுகளும் வெளியிடங்களுக்கு ஏற்றுமதியாகின்றன. பூமியிலிருந்து சுண்ணாம்புக்கல், நிலக்கரி உள்ளிட்டவற்றை வெட்டி எடுத்து பயன்படுத்துகிற நாம், பூமியையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்ல வேண்டும். அந்த வகையில் மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிடுதல், மழைநீர் சேகரித்து நிலத்தடிநீர்மட்டத்தை உயர்த்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட பொதுமக்கள் முன்வர வேண்டும் என்பதே சுற்றுசூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Next Story