மேட்டூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்


மேட்டூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 7 Jan 2019 10:00 PM GMT (Updated: 7 Jan 2019 10:00 PM GMT)

மேட்டூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டூர்,

மேட்டூரை அடுத்த பி.என்.பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது ராமமூர்த்தி நகர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 10.30 மணியளவில் மேட்டூர்-சேலம் மெயின்ரோட்டில் ஆர்.எஸ். பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கருமலைக் கூடல் போ லீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரை ந்து வந்தனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆனால் சிறிதுநேரத்திற்கு பின்னர் பொதுமக்கள் மீண்டும் அந்த பகுதிக்கு வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், எங்கள் பகுதிக்கு வழக்கம்போல் காவிரி குடிநீர் வழங்க வேண்டும், என்றனர்.

தகவல் அறிந்ததும் பி.என்.பட்டி பேரூராட்சி நிர்வாக அலுவலர் கலைராணி அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறும்போது:-

குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் பராமரிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். இதனால் காவிரி குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. மாற்று ஏற்பாடாக ஆழ்துளை கிணறு மூலம் தற்காலிகமாக குடிநீர் வினியோகம் செய்யப்படும், என்றார்.

ஆனால் இதை பொதுமக்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மதியம் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலைமறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story