மயிலாடுதுறையில் தபால்-பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் பணிகள் பாதிப்பு


மயிலாடுதுறையில் தபால்-பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2019 10:45 PM GMT (Updated: 8 Jan 2019 7:19 PM GMT)

மயிலாடுதுறையில், தபால்-பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.

மயிலாடுதுறை,

அகில இந்திய அளவில் பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஒப்பந்த வேலை முறையை கைவிட வேண்டும். மத்திய-மாநில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கக்கூடாது. தொழிலாளர் நல சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. அதன்படி மயிலாடுதுறையில் தலைமை தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தால் தலைமை தபால் நிலைய அலுவலகத்தின் கதவுகள் இழுத்து மூடப்பட்டன. இதனால் மணி ஆர்டர், தபால் பட்டுவாடா, பார்சல் புக்கிங் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப் பட்டன.

இதேபோல் ரெயில் நிலைய தபால் சேவைகளும் பாதிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து தபால்களும் தலைமை தபால் நிலையத்திற்கு வந்து சேரவில்லை. மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புற தபால் நிலைய ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து தலைமை தபால் நிலைய வளாகத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த விளக்கக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மோகன்குமார், அமிர்தலிங்கம், சங்கர், கமலக்கண்ணன், ஜெயகுமார், செல்வ நாயகம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதேபோல் மயிலாடுதுறை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story