நிவாரண பொருட்கள் கிடைக்காததால் விரக்தி: மின்மாற்றியில் ஏறி, வாலிபர் தற்கொலை முயற்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை


நிவாரண பொருட்கள் கிடைக்காததால் விரக்தி: மின்மாற்றியில் ஏறி, வாலிபர் தற்கொலை முயற்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 8 Jan 2019 11:00 PM GMT (Updated: 8 Jan 2019 7:47 PM GMT)

புயல் நிவாரண பொருட்கள் கிடைக்காத விரக்தியில் மின்மாற்றியில் ஏறி, மின்கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் படுகாயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஓடு மற்றும் குடிசை வீடுகள் புயல் பாதிப்பால் சேதமடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணத்தொகை மற்றும் பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட பலருக்கும் நிவாரணப் பொருட்கள் கிடைக்கவில்லை என்று தினமும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

மேற்பனைக்காடு கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், ஆயிரத்து 100 பேருக்கு மட்டுமே நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளை இழந்தவர்கள் மற்றும் புயலால் பாதிக்கப்பட்டவர்கள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த அறந்தாங்கி தாசில்தார் கருப்பையாவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் சேதமடைந்த தங்களது வீடுகளின் படங்களை காட்டி, நிவாரணம் கேட்டதுடன் குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உத்தரவாதம் கொடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் மேற்பனைக்காடு கிழக்கு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் நீலகண்டன் (வயது 28), தனது வீடு புயலால் முற்றிலும் சேதமடைந்ததால், அரசு நிவாரண பொருட்கள் தருமாறு வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர், வீட்டின் அருகில் உள்ள மின்மாற்றியில் ஏறி மின்கம்பிகளை பிடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி படுகாயத்துடன் நீலகண்டன் தூக்கி வீசப்பட்டார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நீலகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிவாரண பொருட்கள் கிடைக் காத விரக்தியில் வாலிபர் மின்கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story