கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி, குடிநீர் திட்டத்தை நிறுத்தக்கோரி நூதன போராட்டம்


கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி, குடிநீர் திட்டத்தை நிறுத்தக்கோரி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2019 11:00 PM GMT (Updated: 8 Jan 2019 7:51 PM GMT)

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி, குடிநீர் திட்டத்தை நிறுத்தக்கோரி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்படுவதை கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாகவே பலவித போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து தஞ்சைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அதிருப்தியில் காணப்படுகின்றனர்.

இதனால் நேற்று கொள்ளிட நீராதார பாதுகாப்பு குழுவை சேர்ந்த அரியலூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி மாரியம்மாள் தலைமையில், மணல் குவாரி மற்றும் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் இரண்டையும் நிறுத்தக்கோரி அப்பகுதி பெண்கள் குத்துவிளக்கு பூஜை நடத்தி அம்மனிடம் வழிபட்டு நூதன போராட்டம் நடத்தினர்.

பொதுவாக பெண்கள் தங்கள் குடும்ப நன்மைக்காகவே இதுபோன்ற வழிபாடுகளில் ஈடுபடுவர். ஆனால் பொது நன்மைக்காக போராட்ட கோணத்தில் இதுபோன்று வழிபாட்டில் ஈடுபடுவது இப்பகுதியில் உள்ள பல கிராம மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திருமானூர் பஸ் நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற இப்பூஜையில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், குங்குமம், போன்ற பல பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதுப்பட்டு உடுத்தி சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு குத்துவிளக்கு பூஜை தொடங்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பெண்கள் மந்திரங்களை கூறி அம்மனிடம் மணல் குவாரியையும், குடிநீர் திட்டத்தையும் நிறுத்த அருள்புரிய வேண்டும் என வழிபாடு செய்தனர். இப்பூஜையில் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Next Story