உடையார்பாளையம் அருகே கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


உடையார்பாளையம் அருகே கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Jan 2019 10:15 PM GMT (Updated: 8 Jan 2019 8:00 PM GMT)

உடையார்பாளையம் அருகே கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்கப்பட்டார். அவரை கடத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள இடையார் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வகுமாரி. இவர் ஜெயங்கொண்டம் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாள். இவர்களது மகள் ராகவி(வயது 12). துளாரங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ராகவி இரவு 7 மணி அளவில் தெருவில் தனது தம்பி மற்றும் தோழியுடன் விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 மர்ம நபர்கள் ராகவியுடன் பேச்சுக்கொடுத்தனர். பின்னர் அவரிடம் சாக்லெட் வாங்கி தருவதாக கூறி, அருகிலுள்ள கடைக்கு அழைத்து சென்றனர். மிகவும் அக்கறையுடன் பேசியதால் அவர்களை நம்பி ராகவியும் மோட்டார் சைக்கிளில் ஏறினார். அப்பகுதியில் இருந்த கடையை தாண்டி நிற்காமல் சென்றதால் ராகவி அதிர்ச்சி அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராகவின் தம்பியும், தோழியும் கூச்சல் போட்டனர். உடனடியாக ராகவியின் பெற்றோரிடம் சென்று கூறினர். இதையடுத்து ராகவியின் தந்தை ரவிச்சந்தின் மற்றும் உறவினர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் ராகவியை தேடினர். மேலும் இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடையார்பாளையம் போலீசார் தா.பழூர், வி.கைகாட்டி போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அளித்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் மணகெதி கிராம பஸ் நிறுத்தத்தில் ஒரு மாணவி நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று ராகவியை மீட்டனர். போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கை மற்றும் ஆங்காங்கே ரோந்து பணியை தீவிரப்படுத்தியதையும், பொதுமக்கள் தேடுவதையும் அறிந்த மர்மநபர்கள் ராகவியை இறக்கி விட்டு சென்றுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து ஆறுதல் கூறினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, ராகவியை கடத்திய மர்மநபர்கள் யார்?, எதற்காக கடத்தினர்?, ரவிச்சந்திரனுக்கு விரோதிகள் யாராவது இருக்கிறார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமையில் போலீசார் விடிய, விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் மர்மநபர்கள் சிக்கவில்லை. தொடர்ந்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story