27-ந் தேதி கும்பாபிஷேகம் கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு


27-ந் தேதி கும்பாபிஷேகம் கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 9 Jan 2019 10:45 PM GMT (Updated: 9 Jan 2019 9:59 PM GMT)

கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று திருப்பணிகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ரூ.22½ கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கோவில் மூலஸ்தானம், கருவறை, மாடவீதி, சாலைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் திருமலை திருப்பதி தேவஸ்தான சென்னை உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய தலைவர் ஸ்ரீகிருஷ்ணா, திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயலாளர் போலோ பாஸ்கர், திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் விஜிலென்ஸ் அதிகாரி கோபிநாத் ஷெட்டி ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி திருப்பதி கோவில் பணிகள் 30 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டு ரூ.22½ கோடியில் திருப்பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. வருகிற 22-ந் தேதி மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது. யாகசாலை பூஜைக்கு பிறகு 27-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதன் பிறகு 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஆகம விதிகளின் படி அனைத்து பூஜைகளும் நடக்கும். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்-அமைச்சரையும், ஆந்திர முதல்-மந்திரியையும் அழைத்துள்ளோம். மதுரையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் மறுநாள் கோவிலுக்கு வருவதாக தமிழக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி கோவில் கட்ட நிலம் வழங்கிய விவேகானந்தா கேந்திரா நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆய்வின் போது திருமலை திருப்பதி தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி, ஆகம ஆலோசகர் சுந்தரவரதன், சென்னை உள்ளூர் தகவல் மைய உறுப்பினர்கள் மோகன்ராவ், ரவிபாபு, சந்திரசேகர், சுதாகர் ரெட்டி, சுரேஷ்குமார், தலைமை பொறியாளர் சந்திரசேகர ரெட்டி, துணை செயற்பொறியாளர் சந்திரமவுலி, ஸ்தபதி முனுசாமி ரெட்டி, உதவி பொறியாளர் பார்த்தசாரதி, அமர்நாத்ரெட்டி, திட்ட பொறியாளர் அப்சாராவ், கன்னியாகுமரி திருப்பதி கோவில் உதவி செயல் அலுவலர் ரவி, குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story