குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய பனியன் நிறுவன அதிபர், மனைவிக்கு 1½ ஆண்டு சிறை - திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு


குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய பனியன் நிறுவன அதிபர், மனைவிக்கு 1½ ஆண்டு சிறை - திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 Jan 2019 12:17 AM GMT (Updated: 10 Jan 2019 12:17 AM GMT)

குழந்தை தொழி லாளர்களை கட்டாயப் படுத்தி வேலைக்கு அமர்த்தி பனியன் நிறுவன அதிபர் மற்றும் அவருடைய மனைவிக்கு 1½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருப்பூர்,

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு முத்துநகர் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சிவா என்கிற சிவக்குமார் (வயது34). இவருடைய மனைவி சாந்தி(30). இவர்கள் அதே பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களின் நிறுவ னத்தில் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுவதாக திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி அந்த நிறுவனத்தில் திடீரென சென்று ஆய்வு நடத்தி னார்கள்.

அப்போது அங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்த சிறுவர் களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்கள் கொடுமைப்படுத்தியதுடன், கட்டாயப்படுத்தி வேலை வாங்கி வந்ததும் விசார ணையில் தெரிய வந்தது. இதையடுத்து அங்கு குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 4 சிறுமிகள், 10 சிறுவர்கள் என மொத்தம் 14 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டு காப்பகத் திற்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக அப்போதைய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அசோக் குமார் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் படி போலீசார் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவக்குமாரையும் அவருடைய மனைவி சாந்தியையும் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு திருப்பூர் ஜே.எம்.1-ல் நடந்து வந்தது.

இந்த நிலையில் வழக்கு விசாரணை ஜே.எம்.1 மாஜிஸ்திரேட்டு கவியரசன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து, நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சிவா என்கிற சிவக்குமார் மற்றும் அவருடைய மனைவி சாந்தி ஆகியோருக்கு குழந்தைகளை கட்டாயப்படுத்தி பணிசெய்ய வைத்தல், குழந்தைகளை கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தலா 1½ ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித் தார். இதில் அரசு வக்கீல் கவிதா ஆஜராகி வாதாடி னார்.


Next Story