பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயாரான கரும்புகள் உரிய விலை கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்ப்பு


பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயாரான கரும்புகள் உரிய விலை கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 10 Jan 2019 10:45 PM GMT (Updated: 10 Jan 2019 7:53 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. உரிய விலை கிடைக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

விக்கிரமங்கலம்,

பொங்கல் பண்டிகையின்போது ஒவ்வொருவரின் வீடுகளில் இடம்பெறுவது கரும்பு தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கரும்பு பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம், கொலையனூர், உல்லியக்குடி, ஆலம்பள்ளம், சுத்தமல்லி, சுந்தரேசபுரம், ஸ்ரீபுரந்தான் பொய்யூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விதை கரும்பு நட்டு தொடர்ந்து உரம், தண்ணீர் விட்டு பராமரித்து வந்தனர். விளைந்த நிலையில் சில இடங்களில் வயலிலேயே கரும்புகளை வைத்து சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர். சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு சரியாக மழை இல்லாததாலும், வேலையாட்கள் பற்றாக்குறையாலும் கரும்புகளின் விலை உயர தொடங்கி உள்ளது. ஒரு கரும்பின் விலை ரூ.15 முதல் ரூ.25 வரையிலும், 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.250 முதல் ரூ.350 வரையிலும் விற்கப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் கரும்புகள் அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதனை அறுவடை செய்ய விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் கரும்புகள் கரூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கரும்பு ஓராண்டு கால பயிர் என்பதால் நாங்கள் கடந்த ஆண்டு பொங்கல் முடிந்த உடன் சாகுபடி செய்ய தொடங்கி, தொடர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தோம். தற்போது வயலில் கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு பருவமழை இல்லாததால் தண்ணீர், ஆள்பற்றாக்குறையால் அதிக செலவு ஏற்பட்டுள்ளது. அதனால் கரும்புக்கு உரிய விலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது தமிழக அரசு பொங்கல் பையுடன் கரும்பை சேர்த்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் கொள்முதல் செய்யவரும் அதிகாரிகள் 1 கரும்பு ரூ.8 முதல் ரூ.10 வரை மட்டுமே கேட்டுச்செல்கின்றனர். ஆனால் 1 கரும்பு ரூ.15-ல் இருந்து ரூ.20 வரை விற்றால் மட்டுமே உற்பத்தி செய்த விலை கிடைக்கும். மேலும் கரும்பு பொங்கல் பண்டிகை 2 தினங்களுக்கு முன்பு அறுவடை செய்யப்படும் என தெரிவித்தார். 

Next Story