திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பையை உரமாக்கி வருமானம் ஈட்டும் கிராம ஊராட்சிகள்


திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பையை உரமாக்கி வருமானம் ஈட்டும் கிராம ஊராட்சிகள்
x
தினத்தந்தி 10 Jan 2019 10:45 PM GMT (Updated: 10 Jan 2019 8:31 PM GMT)

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பையை உரமாக்கி கிராம ஊராட்சிகள் வருமானம் ஈட்டி வருகின்றன.

கிருஷ்ணராயபுரம்,

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் சேரும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். அந்த குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல ஊராட்சியின் சார்பில் பணி அமர்த்தப்பட்டுள்ள ‘தூய்மை காவலர்கள்‘ என்றழைக்கப்படும் பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர்.

பின்னர் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கின்றனர். இதில் மக்காத குப்பைகளை மறுசுழற்ச்சிக்காக விற்கப்படுகிறது. மக்கும் குப்பைகளை பயன்படுத்தி இயற்கை மண்புழு உரம் தயாரிக்கும் பணிகள் பல்வேறு ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உரத்தை விற்பதன் மூலம் ஊராட்சிகளுக்கு வருமானம் கிடைக்கிறது.

அந்த வகையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் திருக்காம்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங் களில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த பகுதிலேயே தரம் பிரிக்கப்பட்டு குழிகளில் தனித்தனியாக கொட்டப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகள் நன்கு மக்கியவுடன் அவற்றை அம்மா பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை மண்புழு உரம் தயாரிக்கும் குடிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

.அந்த குடிலில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் இந்த மக்கிய குப்பைகளை கொட்டி அதில் மண் புழுக்கள் விடப்படுகின்றன. பின்னர் ஈரத்தன்மையை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு சிறிதளவு வைக்கோலை தொட்டியிலுள்ள குப்பையின் மேற்பரப்பில் பரவலாக பரப்பி தினமும் தண்ணீர் தெளிக்கப்படுகிறது .அந்த குப்பையை மண்புழுக்கள் உணவாக எடுத்துக்கொண்டு உண்டு பின் எச்சமாக வெளியேற்றும் கழிவுகளே இயற்கை உரமாக மாறுகிறது.

புழுக்கள் குப்பையில் விடப்பட்டு ஒரு மாதத்திற்கு பின் தொட்டியில் உள்ள கழிவுகளான உரங்கள் தனியாக பிரிக்கப்பட்டு உரமாக ஒரு கிலோ ரூ.10 என விற்கப்படுகிறது. இவ்வாறு இந்த ஊராட்சியின் சார்பில் மாதத்திற்கு 300 கிலோ இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதன் மூலம் ரூ.3 ஆயிரம் வரை ஊராட்சிக்கு வருமானம் கிடைக்கிறது. மேலும், மறுசுழற்சிக்கு விற்கப்படும் மக்காத குப்பையின் மூலமும் வருமானம் கிடைக்கிறது.

இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அண்மை காலத்தில் விவசாயிகளிடம் ஏற்பட்டு வருவதால் இந்த உரத்திற்கு அதிக தேவை இருக்கும் என எதிபார்க்கப்படுகிறது. இந்த உரம் தயாரிக்கும் பணியினை அனைத்து ஊராட்சிகளும் சிறப்பாக செயல்படுத்தும்போது அதிக அளவு உரம் கிடைப்பதுடன் ஊராட்சிகளுக்கும் மேலும் அதிக வருவாய் கிடைக்கும். அந்த நிதியை ஊராட்சியின் வளர்ச்சி பணிக்கு பயன் படுத்த முடியும் என்பதுடன், சுற்றுச்சூழலும், மண்வளமும் பாதுகாக்கப்படும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

Next Story