பொங்கல் பண்டிகைக்கு மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி மும்முரம் போதிய வருமானமின்றி தொழிலாளர்கள் வேதனை


பொங்கல் பண்டிகைக்கு மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி மும்முரம் போதிய வருமானமின்றி தொழிலாளர்கள் வேதனை
x
தினத்தந்தி 10 Jan 2019 9:45 PM GMT (Updated: 10 Jan 2019 8:53 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி கோட்டுச்சேரி பகுதியில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோட்டுச்சேரி,

பண்டைய காலத்தில் நமது முன்னோர் மண்பாண்டங்களை பயன்படுத்தி வந்தனர். மண்பாண்டத்தில் சமைத்த உணவு ருசியாகவும், உடலுக்கு தீங்கு விளைவிக்காததாகவும் இருந்தது. இதனால் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

ஆனால் தற்போது கியாஸ் அடுப்பு, மின்சார அடுப்பையே பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்துகின்றனர். இதனால் மண்பாண்டங்கள் பயன்பாடு என்பது அரிதான ஒன்றாகிவிட்டது. பொங்கல் பண்டிகையின்போது அதிலும் ஒரு சிலர் மட்டுமே மண்பாண்டங்களை பயன்படுத்துகின்றனர்.

தை பொங்கல் நெருங்கி வருவதால் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் மண்பானை, தட்டு, மண் சட்டி போன்றவை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவை வண்டிகள் மூலம் ஏற்றிச்செல்லப்பட்டு சந்தைகள் மற்றும் கிராமங்கள் தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து கோட்டுச்சேரியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:- பண்டைய காலத்தில் நமது முன்னோர் உருவாக்கி தந்த மண்பாண்ட தொழிலை நாங்கள் செய்து வருகிறோம். இப்போது உள்ள சூழ்நிலையில் மக்கள் அலுமினியம், எவர்சில்வர், பித்தளை போன்ற பாத்திரங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் மண்பாண்ட தொழில் நலிவுற்று உள்ளது. எங்களின் பிள்ளைகள் படித்துவிட்டு பல்வேறு பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர். எங்கள் தலைமுறையோடு மண்பாண்ட தொழில் முடிந்துவிடும் தொழிலாக உள்ளது. இதற்கு போதிய வருமானம் கிடைக்காததே காரணம். எனவே மண்பாண்ட தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி வழங்க வேண்டும். புதுச்சேரி அரசு மழைக்காலங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story