ஆடுகளை திருட முயன்ற 3 பேர் கைது


ஆடுகளை திருட முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2019 11:17 PM GMT (Updated: 11 Jan 2019 11:17 PM GMT)

அதிகாலையில் அவரது வீட்டில் உள்ள ஆடுகளை மர்ம நபர்கள் திருடிக்கொண்டிருந்த போது ஆடுகள் சத்தம் போடவே, தூங்கி கொண்டிருந்த பன்னீர்செல்வம் எழுந்து வந்து பார்த்தார்.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தத்தனூர் மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 52). விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் அவரது வீட்டில் உள்ள ஆடுகளை மர்ம நபர்கள் திருடிக்கொண்டிருந்த போது ஆடுகள் சத்தம் போடவே, தூங்கி கொண்டிருந்த பன்னீர்செல்வம் எழுந்து வந்து பார்த்தார்.

அப்போது அவரது ஆடுகளை திருடர்கள் காரில் ஏற்றுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பன்னீர்செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து மர்மநபர்களை பிடித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், ஆடுகளை திருட முயன்றவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வேலன்(41), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ்(19), அதே பகுதியை சேர்ந்த பாண்டியன்(24) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் ஆடுகள் திருட்டு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story