சேலம் அஸ்தம்பட்டியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையிடம் 4½ பவுன் நகை பறிப்பு


சேலம் அஸ்தம்பட்டியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையிடம் 4½ பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2019 10:15 PM GMT (Updated: 12 Jan 2019 4:32 PM GMT)

சேலம் அஸ்தம்பட்டியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையிடம் 4½ பவுன் நகை பறிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம், 

சேலம் அஸ்தம்பட்டி ராஜாராம் நகரை சேர்ந்தவர் வசந்தகுமார். இவருடைய மனைவி வத்சலா (வயது 60). இவர் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் மாலை இவர் தனது வீட்டில் இருந்தபோது கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்டு வத்சலா கதவை திறந்து வெளியே வந்து பார்த்தார்.

அப்போது அங்கு 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். பின்னர் அவர்கள் வத்சலாவிடம் நீங்கள் பணியாற்றிய பள்ளியில் எங்களின் உறவினர் ஒருவர் படித்தார். அவருடைய டி.சி.யை பெற தாங்கள் உதவ வேண்டும் என அந்த வாலிபர்கள் கூறினர். அதற்கு வத்சலா, அந்த வாலிபர்களிடம் நீங்கள் பள்ளிக்கு சென்று தற்போது தலைமை ஆசிரியராக உள்ளவரிடம் கேளுங்கள் என கூறியுள்ளார்.

அப்போது திடீரென அந்த வாலிபர்கள் வத்சலா கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் நகையை பறித்தனர். இதையடுத்து அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். அதற்குள் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் வத்சலா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் உருவம் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story