புதுச்சத்திரம் அருகே ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி பலி


புதுச்சத்திரம் அருகே ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 12 Jan 2019 9:30 PM GMT (Updated: 12 Jan 2019 6:07 PM GMT)

புதுச்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

புவனகிரி, 

புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியாண்டிகுழி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் பெரியப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். கடலூர்- சிதம்பரம் சாலையில் சென்ற போது, எதிரே பெரியப்பட்டில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த ஆம்புலன்ஸ் ஒன்று ராமச்சந்திரன் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான ராமச்சந்திரன் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராமச்சந்திரன் மகன் முத்துவேல், புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஆம்புலன்ஸ் டிரைவர் சென்னை ராமாபுரத்தை சேர்ந்த ஞானபிரகாசம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story