கோடநாடு வழக்கு விவரங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும்; திருப்பூரில் ஜி.கே.வாசன் பேட்டி


கோடநாடு வழக்கு விவரங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும்; திருப்பூரில் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 12 Jan 2019 11:45 PM GMT (Updated: 12 Jan 2019 7:18 PM GMT)

கோடநாடு வழக்கு விவரங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று திருப்பூரில் ஜி.கே.வாசன் கூறினார்.

திருப்பூர்,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திருப்பூர் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி பாதிக்கப்படாத வகையில் மத்திய, மாநில அளவில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். ஸ்டெர்லைட் பிரச்சினையில் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவெடுத்து மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். அரசுக்கு இரட்டை நிலை இருக்கக்கூடாது. மக்களுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தபிறகும் அதை திறப்பது ஏற்படையது அல்ல. வளர்ச்சிப்பணிகள் என்று திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகளோடு அரசு பேசி வேலைநிறுத்தத்தை கைவிட செய்து சுமூக முடிவு எடுக்க வேண்டும்.

டெண்டர் கோரப்பட்ட அத்திக்கடவு–அவினாசி திட்டத்தின் நிர்வாக பணிகளை உடனடியாக தொடங்க தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். மேகதாது பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து கர்நாடகாவின் செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி திருச்சியில் காவேரி பாசன சபை, த.மா.கா. விவசாய அணி சார்பில் பிரதமருக்கு 1 லட்சம் தபால் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

பொங்கல் பரிசு தொகை தடையில்லாமல் ஓரிருநாட்களில் உரியவர்களுக்கு கிடைக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சுற்றுச்சூழல் மாசடைந்து விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது மத்திய அரசு திருவாரூர் பகுதியில் 840 சதுர கிலோ மீட்டர் விளைநிலங்களில் எரிவாயு கிணறுகள் அமைக்க ஏலம் விடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது முற்றிலும் தவறான முயற்சியாகும். திட்டங்களை கட்டாயப்படுத்தி விவசாயிகள், மக்கள் மீது திணிக்கக்கூடாது.

உயர்மின்கோபுரங்கள் விளைநிலங்கள் வழியாக அமைப்பது ஏற்புடையது அல்ல. பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணங்களை அறிவித்த பிறகே பணிகளை செய்ய வேண்டும். அதுவரை பணிகளை நிறுத்தக்கூடிய ஆணைகளை அரசு வெளியிட வேண்டும்.

தேர்தல் நெருங்கும் போது மக்களுடைய உணர்வுகளுக்கு ஏற்றவாறு, தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் கூட்டணி குறித்து த.மா.கா. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். த.மா.கா.வை பொறுத்தவரை தேர்தலின்போது ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து வெற்றிகரமாக செயல்படும். அந்த நிலையை அதிகாரப்பூர்வமாக சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்.

மக்கள் மனநிலைக்கு ஏற்றவாறு தமிழகத்தில் எதிர்க்கட்சியை போல் தனித்தன்மையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். மத்திய, மாநில ஆளுங்கட்சியின் குளறுபடிகளை மிகத்தெளிவாக எடுத்துக்கூறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த கட்சியுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை. தேர்தல் நெருங்கும்போது ஒவ்வொரு கட்சியும் மக்களை சந்தித்து மக்களுடைய நம்பிக்கையை மேலும் பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளும். அதுபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. த.மா.காவும் அந்த பணியை செய்து வருகிறது.

கோடநாடு வழக்கு குறித்த விவரங்களை மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும். முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் வெளிவந்ததால் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக விசாரணை ஆணையத்தை அமைத்து அதன் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நேரத்தில் தமிழக அமைச்சர் ஒருவர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மேலும் சந்தேகத்தை வெளிப்படுத்திய காரணத்தால் சி.பி.ஐ. விசாரணை மட்டுமே மக்களுக்கு தெளிவுபடுத்தும் நிலை உள்ளது. த.மா.கா.வும் அதையே கூறுகிறது.

அரசையோ, ஆட்சியாளரையோ, முதல்–அமைச்சரையோ குற்றம்சாட்டினால் அதற்கு ஆதாரம் இல்லை என்று நினைத்தால் ஆட்சியாளர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்துவது அவர்களுடைய கடமையாகும். இல்லையென்றால் மக்கள் மத்தியில் சந்தேகம் பெருகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story