நெல்லை மாவட்டத்தில் இருந்து முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை


நெல்லை மாவட்டத்தில் இருந்து முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை
x
தினத்தந்தி 13 Jan 2019 11:00 PM GMT (Updated: 13 Jan 2019 5:50 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் இருந்து முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக சென்றனர்.

நெல்லை, 

முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் மாசி தேரோட்டம், கந்தசஷ்டி விழா, தைப்பூச திருவிழா ஆகியன சிறப்பு பெற்றதாகும். தைப்பொங்கல் திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. பொங்கல் அன்று முருகனை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்து குவிந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியான செங்கோட்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையம், அம்பை, தென்காசி, தாழையூத்து, தென்கலம், தென்கலம்புதூர் ஆகிய பகுதிகளை பக்தர்கள் கடந்த ஒரு மாதமாக மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள்.

இந்த பக்தர்கள் தங்களுடைய ஊரில் இருந்து குழுவாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்று வருகின்றனர். தங்கள் ஊரில் இருந்தே முருகன் படத்தை சப்பரத்தில் அலங்காரம் செய்து லோடு ஆட்டோவில் வைத்து கொண்டு வருகிறார்கள். மேலும் சில பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஆடி வந்தனர். பாளையங்கோட்டையை சேர்ந்த தாமோதரன் என்பவர், நெல்லை தாமிரபரணி ஆற்றில் உள்ள ஒத்தப்பனை சுடலை மாடசாமி கோவிலில் வைத்து 6 அடி நீளத்துக்கு வேல் குத்தி திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்றார்.

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முருக பக்தர்கள் கூட்டம், கூட்டமாக செல்கிறார்கள். சில பக்தர்கள் 15 அடி நீளமுள்ள அலகு குத்தி சென்றனர்.

நெல்லை மாநகரத்தில் சாலைகளில் எங்கு பார்த்தாலும் முருக பக்தர்களின் கூட்டத்தை பார்க்கவும், பக்தி கோஷத்தை கேட்கவும் முடிகிறது.

நெல்லை சந்திப்பு மேம்பாலத்தை கடந்து செல்லும் பக்தர்கள், சாலைக்குமார சுவாமி கோவில் இருக்கும் பகுதியில் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து செல்கிறார்கள்.

நெல்லை வழியாக செல்லும் முருக பக்தர்கள் நெல்லை தாமிரபரணி ஆற்றில் காலையிலும், மாலையிலும் புனித நீராடினார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றில் முருக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

Next Story