முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறுவனின் வயிற்றில் இருந்த கட்டி அகற்றம்


முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறுவனின் வயிற்றில் இருந்த கட்டி அகற்றம்
x
தினத்தந்தி 13 Jan 2019 10:45 PM GMT (Updated: 13 Jan 2019 10:23 PM GMT)

முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறுவனின் வயிற்றில் இருந்த கட்டி அகற்றப்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு எம்.ஐ.ஆர். ஸ்கேன், சி.டி.ஸ்கேன், 30 எந்திரங்கள் கொண்ட டயாலிசிஸ் பிரிவு உள்ளிட்ட பல்வேறு உயர்தர மருத்துவ சிகிச்சை பிரிவுகள் உள்ளன. இங்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மூலம் உயர்தர சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 11) என்ற சிறுவன் கடந்த 3 மாதமாக வயிற்று வலி இருப்பதாகவும், கடந்த 2 வாரமாக வயிற்று பகுதியில் ஒரு கட்டி தெரிவதாக கூறி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் சிறுவனுக்கு ஸ்கேன் செய்து பார்த்தப்போது மண்ணீரலில் இருந்து ஒரு பெரிய கட்டி உருவாகி இருப்பது தெரியவந்தது.

இந்த மண்ணீரல் கட்டி குழந்தைகளுக்கு மிகவும் அபூர்வமாக உருவாகும் கட்டி யாகும். மேலும் இந்த கட்டி தொடர்ந்து பெரிதாகி கொண்டே இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் இந்த கட்டியை அகற்ற முடிவு செய்து, மருத்துவ குழுவினர் சிறுவனுக்கு நோய்க்கு உண்டான உரிய தடுப்பூசிகளை போட்டு சிகிச்சை அளித்தனர். பின்னர் மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் இந்த கட்டியை முழுவதுமாக அகற்றினர்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுவன் தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளார். இந்த அறுவை சிகிச்சை முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் எவ்வித கட்டணமும் இல்லாமல் செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் மேற்கண்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ.2 லட்சத்திற்கும் மேல் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story