த.மா.கா. விவசாய அணி சார்பில் பிரதமருக்கு 1 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்


த.மா.கா. விவசாய அணி சார்பில் பிரதமருக்கு 1 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2019 10:45 PM GMT (Updated: 14 Jan 2019 7:46 PM GMT)

த.மா.கா. விவசாய அணி சார்பில் பிரதமருக்கு 1 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் தஞ்சையில் நடந்தது. மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்த தபால் அட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர்,

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தி த.மா.கா. விவசாய அணி சார்பில் பிரதமருக்கு 1 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த போராட்டம் கடந்த 12–ந்தேதி தொடங்கியது. வருகிற 27–ந்தேதி வரை இந்த தபால் அட்டைகள் அனுப்பப்படுகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் இந்த தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது. தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் இருந்து பிரதமருக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்துக்கு த.மா.கா. விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி தலைவர்கள் திருப்பதிவாண்டையார், வாசுகோவிந்தராசு, கைலாசம், பொதுச்செயலாளர்கள் வடுவூர் கார்த்தி, ரெங்கராஜன், செயலாளர் திருமானூர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சையில் இருந்து மட்டும் நேற்று 1000 தபால் அட்டைகள் அனுப்பப்பட்டன. இதில் மாவட்ட விவசாய அணி தலைவர்கள் கணபதி, குமார், வேதநாயகம், ராசு, தேவேந்திரன், செல்வம், ராஜாராம், தஞ்சை மாவட்ட த.மா.கா. இளைஞரணி தலைவர் திருச்செந்தில், மாவட்ட பொது செயலாளர் ராம்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் புலியூர் நாகராஜன் கூறுகையில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது. ஆய்வறிக்கை செய்ய வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகி விடும். குடிக்க தண்ணீர் கிடைக்காது. எனவே மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு 1 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பப்படுகின்றன. தொடர்ந்து திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடைபெறுகிறது’’என்றார்.


Next Story