பஸ் கண்டக்டரை தாக்கியவருக்கு வலைவீச்சு


பஸ் கண்டக்டரை தாக்கியவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Jan 2019 10:15 PM GMT (Updated: 14 Jan 2019 7:58 PM GMT)

பெரம்பலூரில் இருந்து லெப்பைக்குடிகாடு செல்ல வேண்டிய அரசு பஸ் கண்டக்டர் வேல்முருகன், அங்குள்ள அலுவலகத்திற்கு சென்றுவிட்டு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

பெரம்பலூர்,

அப்போது, பஸ் நிலையத்திற்குள் அத்துமீறி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், வேல்முருகன் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தாக்கியதில், வேல்முருகனின் தலையில் காயம் ஏற்பட்டது. இதையறிந்த, அங்கிருந்த அரசு பஸ்களின் கண்டக்டர்கள் ஒன்றிணைந்து அரசு பஸ்களை பஸ் நிலையத்தில் நிறுத்தி, கண்டக்டரை தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பஸ்களை இயக்க மறுத்தனர்.

இதனால் பொங்கல் பண்டிகைக்கு பொருட்களை வாங்கி செல்ல பெரம்பலூர் நகரத்துக்கு வந்த பயணிகள், பஸ் வசதியின்றி பெரிதும் அவதியடைந்தனர்.  தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரசு பஸ் ஊழியர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர். பின்னர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாகிய இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் பஸ் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story