காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்லமாட்டார்கள் : சித்தராமையா சொல்கிறார்


காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்லமாட்டார்கள் : சித்தராமையா சொல்கிறார்
x
தினத்தந்தி 15 Jan 2019 12:00 AM GMT (Updated: 15 Jan 2019 12:00 AM GMT)

கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள் என்றும் முன்னாள் முதல்-மந்திரி சித்த ராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.எ.க்கள் 3 பேர் மும்பையிலும், மேலும் சிலர் ெடல்லியில் முகாமிட்டு இருப்பதாக தகவல்கள் ெவளியாகி இருக்கிறது. இதற்கிடையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்கவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் நேற்று காலையில் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் மந்திரிகளுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சிக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார்.

பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பற்றியும், மும்பையில் சிலர் இருப்பது பற்றியும் சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள். அவ்வாறு வரும் தகவல்கள் உண்மையல்ல. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதாக வதந்தி பரவுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்கிறது. இதற்காக எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேரப்போவதாக பா.ஜனதாவினர் பொய் தகவல்களை கூறி வருகின்றனர்.

எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் தான் இருக்க வேண்டுமா?, வேறு எங்கும் செல்லக்கூடாதா?. எம்.எல்.ஏ.க்கள் மும்பை செல்வதில் எந்த தவறும் இல்லை. அவர்களது விருப்பப்படி மும்பை சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வருகிறார்கள். இதனை பெரிதுபடுத்த வேண்டாம். கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story