அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் மாற்றப்பட்டதாக கூறப்பட்ட பெண் குழந்தை திடீர் சாவு - போலீசார் விசாரணை


அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் மாற்றப்பட்டதாக கூறப்பட்ட பெண் குழந்தை திடீர் சாவு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Jan 2019 11:00 PM GMT (Updated: 16 Jan 2019 9:08 PM GMT)

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் மாற்றப்பட்டதாக கூறப்பட்ட பெண் குழந்தை திடீரென இறந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுக்கம்பாறை,

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் குசேலன் (வயது 30). லாரி டிரைவர். இவரது மனைவி பாரதி (24). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான பாரதி கடந்த 10-ந் தேதி பிரசவத்துக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு 12-ந் தேதி சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை வெளியில் எடுக்கப்பட்டது.

அதேநாளில் வேறு ஒரு பெண்ணுக்கும் பிரசவம் பார்க்கப்பட்டது. அன்று பிற்பகல் பாரதிக்கு ஆண் குழந்தை பிறந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் பாரதியின் உறவினர்களிடம் தெரிவித்து ஒரு ஆண் குழந்தையையும் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரமே நீடித்தது. பின்னர் சில மணி நேரம் கழித்து பாரதியின் உறவினர்களிடம், பாரதிக்கு பெண் குழந்தை தான் பிறந்துள்ளது. தவறுதலாக ஆண் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டது என ஊழியர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டதும் பாரதி, குசேலன் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதுமட்டுமின்றி அந்த பெண் குழந்தை 2 கிலோ எடையில் பிறந்ததாகவும், பிறக்கும் போதே மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குசேலன் மற்றும் அவரது உறவினர்கள் குழந்தையை மாற்றி விட்டீர்கள் எனக்கூறி மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனை தரப்பில் குழந்தைகள் மற்றும் பெற்றோரின் ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்தனர்.

இந்த நிலையில் அந்த பெண் குழந்தை நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் ஆத்திரமடைந்த குசேலனின் உறவினர்கள் தங்கள் குழந்தை எதுவென்று தெரியாமல் எந்த குழந்தையையும் எடுத்துச் செல்ல மாட்டோம் என கூறி தகராறில் ஈடுபட்டனர். ஆனால் டாக்டர்கள் இதுதான் உங்கள் குழந்தை எடுத்துச்செல்லுங்கள் என்றனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் மற்றும் வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். குசேலன் தரப்பினர் மற்றும் மற்றொரு குழந்தையின் தரப்பினர் மற்றும் மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.

டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கை வரும் வரை இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் இருக்கட்டும் என்று கூறினர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story