பனவடலிசத்திரம் அருகே கல்லால் தாக்கப்பட்ட பெண் பரிதாப சாவு வாலிபர் கைது


பனவடலிசத்திரம் அருகே கல்லால் தாக்கப்பட்ட பெண் பரிதாப சாவு வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2019 9:30 PM GMT (Updated: 17 Jan 2019 11:44 AM GMT)

பனவடலிசத்திரம் அருகே கல்லால் தாக்கப்பட்ட பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

பனவடலிசத்திரம், 

பனவடலிசத்திரம் அருகே கல்லால் தாக்கப்பட்ட பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை கைத செய்தனர்.

லாரி டிரைவர்

நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள சாயமலை வலசையை சேர்ந்தவர் சின்ன சுந்தரராஜ் மகன் கணேசமூர்த்தி (வயது 24). இவர் தூத்துக்குடியில் தங்கியிருந்து லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கணேசமூர்த்தி பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த 14–ந் தேதி சாயமலை வலசையில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். பின்னர் அவர் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து, தனது தாய் முத்துக்குட்டி, தங்கை வெண்ணிலாவிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சரோஜா (60) கணேசமூர்த்தியை தட்டிகேட்டார்.

பெண் பரிதாப சாவு

இதில் ஆத்திரமடைந்த கணேசமூர்த்தி அருகே கிடந்த கல்லை எடுத்து சரோஜாவை தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சரோஜா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசமூர்த்தியை கைது செய்து, பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.


Next Story