பிறந்த நாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை


பிறந்த நாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை
x
தினத்தந்தி 17 Jan 2019 11:20 PM GMT (Updated: 17 Jan 2019 11:20 PM GMT)

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி,

முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. திருச்சி கோர்ட்டு அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அ.தி.மு.க. மாநகர் மாவட்டம் சார்பில் குமார் எம்.பி. தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் தலைமையில் மாலை அணிவித்தனர். இதில் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். புதிய நீதிக்கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பாலு தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல் ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.ம.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் மாலை அணிவித்தனர். மாநகரின் பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

லால்குடி தாலுகா அலுவலகம் முன்பு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன் தலைமையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி கட்சியினர் மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் ஊர்வலமாக ரவுண்டானா வழியாக தேரோடும் வீதிகளில் சென்று தேர்முட்டி அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலையை வந்தடைந்தனர். அங்கு கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர்கள் நன்னிமங்கலம் ஆறுமுகம், கூகூர் செல்வழகன், ஆங்கரை குணசேகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரீனா செந்தில் உள்ளிட்ட கட்சியின் ஒன்றிய, நகர, ஊராட்சி நிர்வாகிகள், செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அமைச்சர் வளர்மதி ஏற்பாட்டின்பேரில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

துறையூரில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சேனை செல்வம் தலைமையில் அக்கட்சியினர் சிங்களாந்தபுரம், துறையூர், சிக்கத்தம்பூர் ஆகிய இடங்களில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக ஒன்றிய செயலாளர் கட்சிக் கொடியை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் பகளவாடி, சேனப்பநல்லூர், கண்ணனூர்பாளையம், கலிங்கமுடையான்பட்டி, வீ.எ.சமுத்திரம், நரசிங்கபுரம், செங்காட்டுப்பட்டி, கீரம்பூர் ஆகிய இடங்களில் கட்சிக்கொடி ஏற்றி எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வேம்பு ரெங்கராஜ், மாவட்ட பிரதிநிதி மருதமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அந்தநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு குழுமணியில் உள்ள அவருடைய உருவ சிலைக்கு ஒன்றிய செயலாளர் அழகேசன் தலைமையில் மாலை அணிவித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ஒன்றிய, மாவட்ட பிரதிநிதிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story