கொடுங்கையூரில் மதுக்கடை சுவரில் துளைபோட்டு பணம் கொள்ளை


கொடுங்கையூரில் மதுக்கடை சுவரில் துளைபோட்டு பணம் கொள்ளை
x
தினத்தந்தி 18 Jan 2019 10:00 PM GMT (Updated: 18 Jan 2019 4:22 PM GMT)

கொடுங்கையூரில் மதுக் கடை சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் சந்திரசேகரன் நகரில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு கொளத்தூரைச் சேர்ந்த வரதராஜன் (வயது 47) என்பவர் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். விற்பனையாளராக 2 பேர் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இவர்கள் 3 பேரும் வியாபாரம் முடிந்து, மதுபானம் விற்பனையான ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்தை கடையின் கல்லாவில் வைத்து பூட்டினர். பின்னர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

சுவரில் துளைபோட்டு கொள்ளை

நேற்று மதியம் 12 மணிக்கு வழக்கம்போல் மதுக்கடையை திறந்து உள்ளே சென்ற ஊழியர்கள், கல்லாப்பெட்டியில் வைத்து இருந்த ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடையின் பூட்டு உடைக்கப்படாததால் பணம் கொள்ளைபோனது எப்படி? என பார்த்த போது கடையின் பின்பக்க சுவரில் துளை போடப்பட்டு இருப்பது தெரிந்தது.

காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் இந்த மதுக்கடையில் கூடுதல் விற்பனை நடைபெற்று உள்ளது. இதனை கண்காணித்த மர்மநபர்கள், கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்ற பிறகு கடையின் பின்பக்க சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story