இலங்கை ரோந்து கப்பல் மோதி பலியான ராமநாதபுரம் மாவட்ட மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது பொன்.ராதாகிருஷ்ணன்- கலெக்டர் அஞ்சலி


இலங்கை ரோந்து கப்பல் மோதி பலியான ராமநாதபுரம் மாவட்ட மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது பொன்.ராதாகிருஷ்ணன்- கலெக்டர் அஞ்சலி
x
தினத்தந்தி 18 Jan 2019 11:30 PM GMT (Updated: 18 Jan 2019 8:32 PM GMT)

இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் கடலில் விழுந்து இறந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே உள்ள இலந்தைகூட்டத்தை சேர்ந்தவர் முனியசாமி(வயது 68). மீனவரான இவர் உள்பட அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கடந்த 11-ந்தேதி கச்சத்தீவு பகுதியில் படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் அங்கு வந்தது. அப்போது அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் எச்சரித்தனர்.

மேலும் மீனவர்களின் படகுகள் மீது ரோந்து கப்பலை மோத விட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படகில் இருந்த முனியசாமி உள்பட 4 பேரும் கடலில் விழுந்தனர். கடலில் தத்தளித்த 3 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு கைது செய்தனர். கடலில் விழுந்த முனியசாமி கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. இதனால் அப்போது அவரை தேடாமல் இலங்கை கடற்படையினர் சென்றனர்.

கைதான 3 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் முனியசாமியின் நிலை என்ன ஆனது? என்று தெரியாமல் இருந்ததால் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். மீனவர்களும் சோகத்தில் மூழ்கினர். முனியசாமியை மீட்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி இலங்கையில் கடற்கரையோரம் முனியசாமியின் உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்த பின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க இலங்கை அரசு ஏற்பாடு செய்தது. இறந்த முனியசாமியின் உடல் நேற்று காலை கொழும்பில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி வந்தது.

விமானநிலையத்தில் அவரது உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இறந்த மீனவர் முனியசாமியின் மகள்கள் முருகேஸ்வரி, சண்முகபிரியா ஆகியோரும், அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் திருச்சி விமானநிலையம் வந்திருந்தனர்.

முனியசாமியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இறந்த முனியசாமியின் குடும்பத்தினருக்கு பொன்.ராதா கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் ஆறுதல் கூறினர். அதன்பின் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பா.ஜ.க. மாநில துணை தலைவர் குப்புராமு, மாவட்ட செயலாளர்கள் ஆத்மா கார்த்திக், முத்துச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு மற்றும் உறவினர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் இலந்தை கூட்டம் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இறந்த மீனவர் முனியசாமியின் மனைவி பூங்கோதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. முனியசாமி சாவு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு இலங்கை கடற்படையினர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவருடைய உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story