1,353 காளைகள் பங்கேற்ற பிரமாண்ட ஜல்லிக்கட்டு உலக சாதனை முயற்சியாக எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


1,353 காளைகள் பங்கேற்ற பிரமாண்ட ஜல்லிக்கட்டு உலக சாதனை முயற்சியாக எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Jan 2019 11:15 PM GMT (Updated: 20 Jan 2019 6:50 PM GMT)

உலக சாதனை முயற்சியாக விராலிமலையில் 1,353 காளைகள் பங்கேற்ற பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

விராலிமலை,

தமிழர்களின் வீரவிளையாட்டுகளின் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி, கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளையொட்டி, தமிழக அரசின் அனுமதியுடன் கடந்த 14-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

இந்த நிலையில் உலக சாதனை முயற்சியாக புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள அம்மன்குளம் பட்டமரத்தான் கருப்புசாமி கோவில் விழாவையொட்டி, நேற்று பிரமாண்ட ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 1,800 காளைகள் பதிவு செய்யப்பட்டு களம் இறக்க ஆயத்தபடுத்தப்பட்டன. அதற்காக, காளைகள் முன்பதிவு கடந்த 10 நாட்களாக நடந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை டாக்டர்களால் மருத்துவ பரிசோதனை செய்து தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதுபோல போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கும் டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு தகுதி சான்றிதழ் வழங்கினர். சுமார் 475 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர்.

இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மட்டுமின்றி, போட்டியை காணவந்த பார்வையாளர்களுக்கும் முதன் முறையாக காப்பீடு (இன்சூரன்ஸ்) வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஜல்லிக்கட்டை காண, தமிழகம் முழுவதும் சூரியன் உதயமாகும் முன்பே கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்திருந்தனர்.

ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலையிலேயே சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஜல்லிக்கட்டு நடக்கும் திடலுக்கு காலை 8 மணிக்கு வந்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் செண்டை மேளம் முழங்கவும், பாரம்பரிய நாட்டுப்புற நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் எடப்பாடி பழனிசாமி காலை 8.15 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார்.

முன்னதாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முதலில் வாடிவாசல் வழியாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்க வேண்டாம் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் பின்னர் ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. முதல் கட்டமாக மஞ்சள் சீருடை அணிந்த 100 மாடுபிடி வீரர்கள், காளைகளை அடக்க களத்தில் இறக்கி விடப்பட்டனர்.

மேடையில் அமர்ந்தவாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஜல்லிக்கட்டை கண்டு வியந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், மிக்சி, அயன்பாக்ஸ், செல்போன், கிரைண்டர், மின்விசிறி, தங்கக்காசு, வெள்ளிக்காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. அதுபோல வீரர்களிடம் பிடிபடாமல் போக்குகாட்டிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் மெடல் மற்றும் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல்-அமைச்சர் தனது கரங்களால் மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசு டோக்கன்களை வழங்கினார். பின்னர் அவர் காலை 8.55 மணிக்கு வாடிவாசல் மேடையில் இருந்து புறப்பட்டார். அங்கிருந்து கார் மூலம் மதுரை சென்றார்.

தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடந்தது. வாடிவாசல் வழியாக வந்த பல காளைகளை வீரர்கள் அவற்றின் திமிலை பிடித்து எளிதாக அடக்கினார்கள். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் வாடிவாசல் அருகே நின்று கொண்டு வீரர்களை அச்சுறுத்தின. கரூரை சேர்ந்த குமார் என்பவரது மாடு வாடிவாசலை விட்டு வெளியே வராமல் 10 நிமிடமாக தயங்கி நின்றது. பின்னர் வெளியே வந்த காளை, வீரர்களிடம் பிடிபடாமல் போக்கு காட்டியது. அப்போது வீரர் ஒருவர் திடீரென்று அதன் திமிலை பிடித்தார். இதில் கோபம் கொண்டு அவரை உலுக்கி தள்ளிய மாடு, அவரை தேடி பழிவாங்க முயற்சித்தது. பின்னர் உரிமையாளர் மூலம் மாடு வெளியேற்றப்பட்டது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகள், சில வீரர்களை கொம்பால் முட்டி தள்ளின. சிதறி ஓடிய வீரர்கள் பலர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழு மூலம் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான மூன்று மாடுகளும் பங்கேற்றன. அவை ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. ஆனால், 3 மாடுகளும் வீரர்களிடம் பிடிபடாமல் போக்குகாட்டின. இதையடுத்து 3 மாடுகளுக்கும் பரிசு வழங்கப் பட்டது. போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் நிபந்தனைகளை வர்ணனையாளர் சொல்லி கொண்டே இருந்தார். மாட்டின் வாலை பிடித்தாலோ, கழுத்தை பிடித்தாலோ உடனடியாக ‘ரெட்’ கார்டு கொடுக்கப்பட்டு நடுவர்கள் மூலம் வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் உச்சநீதிமன்ற நிபந்தனையின்படி, வீரர்கள் டவுசர் மற்றும் டி-சர்ட் மட்டுமே அணிய வேண்டும் எனவும், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் இதர ஆடைகள் அணியக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், மாடுபிடி வீரர்கள் சிலர், விதிகளை மீறி ஜீன்ஸ் பேண்ட் அணிந்தபடியே காளைகளை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டை காண துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காலை 11.45 மணிக்கு விராலிமலைக்கு காரில் வந்தார். பின்னர் அங்கு வாடிவாசல் மேடையில் அமர்ந்தவாறு வீரர்கள், காளைகளை அடக்குவதையும், பிடிபடாமல் மாடுகள் செல்வதையும் பார்த்தார். மேலும் வீரர்களுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் வாடிவாசல் திடல் முழுவதும் டிஜிட்டல் திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. எனவே, கேலரிக்கு வரமுடியாதவர்கள் ஆங்காங்கே நின்று, அரசின் செய்தி மக்கள் தொடர்பு சாதனை விளக்க பிரசார வேனில் உள்ள டிஜிட்டல் திரையில் கண்டு களித்தனர். மாலை 5.45 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. மொத்தம் 1,353 மாடுகள் களம் இறக்கப்பட்டன.

முன்னதாக இந்த ஜல்லிக்கட்டை பார்வையிட சுற்றுலா பயணிகளான சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் வந்திருந்தனர். அவர்கள் பார்வையாளர்களாக அமர சிறப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டது. அவர்கள் ஜல்லிக்கட்டை செல்போன் மூலமாகவும், வீடியோ கேமரா மூலமாகவும் பதிவு செய்தனர். மேலும் உலக சாதனைக்கான முயற்சி என்பதால் இந்த ஜல்லிக்கட்டை உலக சாதனையாக பதிவு செய்வதற்காக இங்கிலாந்தில் இருந்து மார்க் மற்றும் மெலனி ஆகிய 2 பேர் வந்திருந்தனர்.

இதில் அமைச்சர்கள் காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, பாஸ்கரன், நவநீதிகிருஷ்ணன் எம்.பி., புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டில் விராலிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் பன்னீர், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் களமாவூர் பாலசுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விளாப்பட்டி சந்திரசேகரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுப.ரெங்கசாமி, ஒன்றிய அவைத்தலைவர் மருதை, ஒன்றிய பொருளாளர் சின்னத்துரை, மாவட்ட பிரதிநிதிகள் ராமன், அறிவழகன், வேலுச்சாமி, ஊராட்சி செயலாளர்கள் நாங்குப்பட்டி பழனியப்பன், பாலாண்டாம்பட்டி கேபிள் துரை, குன்னத்தூர் ஜி.ஆர்.டி. பழனிச்சாமி, குன்னத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கென்னடி, அரிமளம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கடையக்குடி திலகர், மேற்கு ஒன்றிய மாணவரணி வி.டி.பாலசுப்பிரமணியன், மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story