தேவர்சோலையில் பெண்ணை தாக்கியது: கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது


தேவர்சோலையில் பெண்ணை தாக்கியது: கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 20 Jan 2019 11:00 PM GMT (Updated: 20 Jan 2019 6:59 PM GMT)

தேவர்சோலையில் பெண்ணை தாக்கிய கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வை

கூடலூர்,

கூடலூர் வனப்பகுதியில் காட்டுயானைகள், கரடிகள், சிறுத்தைப்புலிகள் அதிகளவு உள்ளன. அவை உணவு தேடி ஊருக்குள் நுழையும்போது தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மேபீல்டு 10–ம் நெம்பர் பாடி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஜா(வயது 45) என்பவர் அங்குள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் பணியாற்றி கொண்டிருந்தார்.

அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே மறைந்து இருந்த கரடி ஒன்று ஸ்ரீஜாவை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு கேரள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் ராகுல் உத்தரவின்பேரில் தனியார் தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் இரவு 7 மணிக்கு கூண்டு வைத்தனர். மேலும் அதன் உள்ளே கரடி விரும்பி சாப்பிடும் பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வனத்துறையினர் வைத்தனர்.

நேற்று காலை 5.30 மணிக்கு வனத்துறையினர் கூண்டு வைத்த இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கூண்டுக்குள் கரடி சிக்கவில்லை. மேலும் அதன் உள்ளே வைத்திருந்த பழங்கள் அப்படியே இருந்தன. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் கரடி பிடிபடும் வரை அப்பகுதியில் கூண்டு வைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:–

பெண் தொழிலாளியை தாக்கிய நாளில் வனத்துறை மூலம் தேயிலை தோட்டத்துக்குள் ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இதனால் கரடி அங்கிருந்து வனத்துக்குள் சென்றிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் கரடி கூண்டில் சிக்கவில்லை. அந்த கரடியை பிடிபடும் வரை தேயிலை தோட்டத்திலேயே கூண்டு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story