புளியந்தோப்பில் வாலிபர் வெட்டிக்கொலை 4 பேரிடம் விசாரணை


புளியந்தோப்பில் வாலிபர் வெட்டிக்கொலை 4 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 20 Jan 2019 11:15 PM GMT (Updated: 20 Jan 2019 7:33 PM GMT)

புளியந்தோப்பில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை ஓட்டேரி டோபிகானா பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 22). கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பாரதி. இவர்களுக்கு 1½ வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது.

பாரதி, ஓராண்டுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். தற்போது குழந்தை சஞ்சனா, அவரது பெரியம்மா வீட்டில் வளர்க்கப்பட்டு வருகிறது. குமரன், அவரது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று மாலை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் குமரன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. இதனால் பயந்துபோன குமரன், அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் மர்மகும்பல் அவரை ஓட, ஓட விரட்டி கே.எம்.கார்டன் பகுதியில் வைத்து அவரை சரமாரியாக வெட்டியது.

இதில் படுகாயம் அடைந்த குமரன், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார், கொலையான குமரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் அதே பகுதியை சேர்ந்த ஐதர் என்ற அப்பு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து குமரனை வெட்டியது தெரிய வந்தது. கொலையான குமரனுக்கும், ஐதருக்கும் ஏற்கனவே முன்விரோதம் உள்ளது.

நேற்று ஐதர் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து குமரன் சீட்டு விளையாடி உள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஐதர் மற்றும் அவரது கூட்டாளிகள் குமரனை வெட்டிக்கொலை செய்து இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஐதர், அபி, அபினேஷ், நரேந்திரன் ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையான குமரன் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளதாகவும், கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story