இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும் கனிமொழி எம்.பி. பேச்சு


இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும் கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 20 Jan 2019 11:15 PM GMT (Updated: 20 Jan 2019 8:49 PM GMT)

இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் பகுதியில் தி.மு.க சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிசுவநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

இந்த பகுதிக்கு பஸ் வசதி இல்லை என்று சொன்னார்கள். பஸ் வர வேண்டும் என்றால் நாங்கள் ஆட்சியில் இருந்தால்தான் கொண்டு வர முடியும். தமிழ்நாட்டில் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்பு அடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டு விவசாயிகள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் டெல்லியில் வந்து பிரச்சினையை கூறவும், மோடியை சந்திக்க போராடினாலும் மோடியை சந்திக்க வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு விவசாயத்திலும் கவலை இல்லை, விவசாயிகள் மீதும் அக்கறை இல்லை. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யப்படும் என கூறிதான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் விலை நிர்ணயம் செய்யவில்லை. இது விவசாயிகளை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் விளை பொருட்களை பாதுகாப்பாக சேமிப்பு கிடங்கில் வைத்து, நல்ல விலை வரும் போது விற்கும் நிலை தமிழகத்தில் இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வரும் போது சேமிப்பு கிடங்கு வசதி செய்து தருவோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் பிரச்சினைகளை மிகவும் முக்கியமாக கருத்தில் கொண்டு தீர்த்து வைப்பார்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவது அரசின் கடமை என்பதை அரசு புரிந்து கொள்ளவில்லை. எந்த வித தொழிற்சாலைகளையும் தமிழகத்தில் உருவாக்கவில்லை. சின்ன சின்ன தொழிற்சாலைகளும் மூடும் நிலையில் உள்ளது. நல்ல தகுதியுடைய இளைஞர்கள் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு போகும் நிலை உள்ளது. அது சரிசெய்யப்பட வேண்டும்.

விரைவில் இடைத்தேர்தல் வருகிறது. நீங்கள் நினைத்தால் ஆட்சியை மாற்ற முடியும். இன்னும் 2 வருடம் காத்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலுடன் வரக்கூடிய இடைத்தேர்தலில் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் கொண்டு வரமுடியும்.

நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. மத்தியில் உள்ள மோடி ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சிக்கும் ஆட்சியாக உள்ளது. எந்த கேள்வியும் எதிர்த்து கேட்காத அரசாக தமிழகம் உள்ளது. பதவி மட்டும் முக்கியமாக கருதி உள்ளது. இதற்கு தி.மு.க. ஆட்சியில் தீர்வு காணமுடியும் என்று நம்பிக்கையோடு இருங்கள். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பசுவந்தனை, எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர் மற்றும் குமரெட்டியாபுரம் ஆகிய கிராமத்தில் நடந்த ஊராட்சி சபை கூட்டங்களில் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தமிழரசி, மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story