100 நாள் வேலை கேட்டு கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை


100 நாள் வேலை கேட்டு கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 8:23 PM GMT)

100 நாள் வேலை கேட்டு கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி ஊராட்சியில், கோட்டைக்காடு கிராமம் உள்ளது. இங்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 400 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் சிலருக்கு கடந்த 10 மாதத்தில் 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. அதில் 26 நாட்களுக்கான கூலி இன்னும் வழங்கப்படவில்லை. இதேபோல் கடந்த ஆண்டிலும் 5 நாட்கள் கூலி நிலுவை உள்ளது.

இதுகுறித்து அந்த கிராம தொழிலாளர்கள் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்த நிதி ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும் நிலையில், பாக்கி உள்ள நாட்களுக்கான வேலையும் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கோட்டைக்காடு கிராம 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் நேற்று காலை கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது புயல் பாதிப்பால் வேலையின்றி தவிப்பதாகவும், எனவே இந்த ஆண்டுக்கான 100 நாள் வேலையை உடனே ஒதுக்க வேண்டும் எனவும், கூலி நிலுவையை உடனே வழங்க வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நலதேவன், சதாசிவம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாக்கி உள்ள நாட்களுக்கான வேலை தினமும் வழங்கப்படும் எனவும், கூலி நிலுவை தொகை 20 நாட்களில் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். இதை யடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story