ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் புயல் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்


ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் புயல் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 8:25 PM GMT)

ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் புயல் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி,

ஆலங்குடி தாலுகா திரு வரங்குளம் ஒன்றியத்தில், மாஞ்சன் விடுதி, பாப்பான் பட்டி, மழவராயன்பட்டி, வீரடிப்பட்டி, பிலாப்பட்டி என 5 கிராமங்கள் உள்ளன. இங்கு 1,100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் இந்த ஊராட்சி பகுதி புயலால் பாதிக்கப்பட்டது. இந்த ஊராட்சியில் 650 குடும்ப அட்டைதாரர்கள் புயல் நிவாரணம் கேட்டு மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுநாள் வரைக்கும் அரசு வழங்கிய நிவாரண பொருட்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரண நிதி எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையில், ஆலங்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் ரெத்தினாவதி, வல்லத்திரா கோட்டை வட்ட வருவாய் அலுவலர் விநோதினி, கீரமங்கலம் வட்ட வருவாய் அலுவலர் ரெங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 10 நாட்களுக்குள் அரசு நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண நிதி கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினர். இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story