தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி பெட்டகத்தை உடைக்க முடியாததால் 100 பவுன் நகை- பணம் தப்பியது


தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி பெட்டகத்தை உடைக்க முடியாததால் 100 பவுன் நகை- பணம் தப்பியது
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 8:43 PM GMT)

மண்ணச்சநல்லூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அதில் உள்ள பெட்டகத்தை உடைக்க முடியாததால் 100 பவுன் நகை மற்றும் பணம் தப்பியது.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் எதுமலை செல்லும் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் என பலதரப்பட்ட மக்களும் தங்களின் தேவைகளுக்காக நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று வருகின்றனர். இந்நிறுவனத்தில் மேலாளராக முசிறி அருகே உள்ள ஆமூரைச் சேர்ந்த ஆரோக்கியராஜ்(வயது 35) மற்றும் 2 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமையன்று பணி நேரம் முடிந்த பின்னர் பணம் மற்றும் நகைகளை அலுவலக பெட்டகத்தில் வைத்துவிட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். நேற்று காலை ஊழியர்கள் அலுவலகத்தின் கதவைத் திறக்க சென்ற போது ஜன்னல் கம்பி மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், ஏட்டு மகேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து, அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது நிதி நிறுவனம் உள்ள கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு மோப்பம் பிடித்தபடி சென்று, பின்னர் கீழே இறங்கி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்நிலையில் இச்சம்பவம் பற்றி அறிந்த நகை அடமானம் வைத்தவர்கள் தங்கள் நகைகள் என்ன ஆனதோ என்ற பதற்றத்துடன் அங்கு வரத் தொடங்கினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அலுவலகத்தின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற அவர்கள், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் ஆகியவற்றுக்கு செல்லும் வயர்களை துண்டித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்க முயன்றுள்ள னர். ஆனால் அதனை உடைக்க முடியாததால், அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 100 பவுன் நகைகளும், ரூ.4 லட்சம் ரொக்கமும் தப்பின.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சமயபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நடைபெற்ற கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களே இந்த சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story