கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் 27-ந் தேதி கும்பாபிஷேகம் யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது


கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் 27-ந் தேதி கும்பாபிஷேகம் யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 21 Jan 2019 10:45 PM GMT (Updated: 21 Jan 2019 9:02 PM GMT)

கன்னியாகுமரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெங்கடாசலபதி கோவிலில் வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா கடற்கரை வளாகத்தில் 5½ ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.22½ கோடி செலவில் பிரமாண்டமான முறையில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு திருப்பதி ஏழுமலையான் சன்னதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் அம்மாள், கருடாழ்வார் சன்னதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், சீனிவாச திருக்கல்யாண மண்டபம், தியான மண்டபம், அன்னதானக்கூடம் உள்பட பல்வேறு மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன.

இந்த கோவிலை சுற்றி மாடவீதிகள், தோரண வாயில்கள், புல்வெளிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட வெங்கடாசலபதி கோவிலுக்கு வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் யாகசாலை பூஜை தொடங்குகிறது.

இதற்காக கோவிலில் 16 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜையையொட்டி அங்குகுரார்ப்பணம், வேதாரம்பம் போன்றவை நடக்கிறது. நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பஞ்சகவ்ய திவ்சமும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதியும் நடைபெறுகிறது.

24-ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை கேஸரா திவ்சமும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதியும், 25-ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை ஜலாதி வாஸமும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம், பூர்ணாகுதியும் நடக்கிறது. 26-ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை கலசாஸ்னாப்னம், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மகாசாந்தி, திருமஞ்சனம் மற்றும் பூர்ணாகுதியும், தொடர்ந்து சாயனாதிவ்சமும் நடைபெறுகிறது.

27-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தர்ம தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் வழங்கப்படுகிறது. மேலும் பிரசாதமாக திருப்பதி கோவில் லட்டும் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. மாலையில் சீனிவாச கல்யாணம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கோவிலில் நேற்று 40 அடி உயரத்தில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கொடிமர பிரதிஷ்டை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற்றது. இதையொட்டி கொடி மரத்திற்கு பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம், குங்குமம், புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. மேலும், கொடி மரத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டி, விசேஷ பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கொடிமர பீடத்திற்கும் பூஜைகள் நடத்தப்பட்டு கொடிமர பிரதிஷ்டை நடந்தது.

நிகழ்ச்சியில், சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் ஆலோசனை மற்றும் தகவல் மைய உதவி செயல் அலுவலர் ரவி, சிறப்பு அதிகாரி முனிரத்தினம், ஆலோசனை மைய உறுப்பினர்கள் மோகன்ராவ், சந்திர சேகர், விவேகானந்தா கேந்திரா துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ், திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்தபதி முனுசாமி ரெட்டி, லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரி தாளாளர் கிருஷ்ண பிள்ளை, திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயற்பொறியாளர் சந்தரமவுலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story