போக்குவரத்து விதிகளை மீறிய வாகன உரிமையாளர்களுக்கு ரூ.1¼ லட்சம் அபராதம்


போக்குவரத்து விதிகளை மீறிய வாகன உரிமையாளர்களுக்கு ரூ.1¼ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:47 PM GMT (Updated: 21 Jan 2019 11:47 PM GMT)

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன உரிமையாளர்களுக்கு ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட் டது. போலீஸ் செயலிக்கு பொதுமக்கள் அனுப்பிய புகைப்படத்தை வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கோவை,

கோவை மாநகர போலீஸ் சார்பில் ‘மின்னணு கண்’ என்ற புதிய ஆன்ட்ராய்டு செயலி உருவாக்கப் பட்டு உள்ளது. இது தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் கடந்த 7-ந் தேதி அறிமுகப்படுத்தப் பட்டது.

இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் ஆன்ட்ராய்டு செல்போன் பயன்படுத்து பவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இச்செயலியை மொபைல் போனில் பதிவேற்றம் செய்த பின்னர் இதில் நுழைந்து தங்களது மொபைல் எண்ணை உள்ளடு செய்து கொள்ள வேண்டும். மொபைல் எண்ணை உள்ளடு செய்த உடன் சம்பந்தப் பட்டவர்களின் செல்போன் எண் போக்குவரத்து காவல் துறையின் அலுவலகத்தின் கணினியில் பதிவு செய்யப்படும்.

போக்குவரத்து விதிகளை மீறி சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை பொதுமக்கள் தங்களது செல்போனில் உள்ள லொக்கேசன் செட்டிங்கை ஆன் செய்து புகைப்படம் எடுத்து இச்செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் படத்தில் எடுக்கப்பட்ட இடமும், நேரமும் இடம் பெற்றிருக்கும்.

இந்த புகைப்படங்கள் போக்குவரத்து காவல் துறை அலுவலகத்துக்கு அனுப்பியவரின் பெயர், மொபைல் எண், புகைப்படம் எடுக்கப்பட்ட பகுதி, நேரத்துடன் வந்து சேரும்.

பதிவேற்றம் செய்யப்பட்ட படம் போக்குவரத்து காவல் துறை அலுவலகத்துக்கு வந்த உடன் அதில் உள்ள போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த விவரங்கள் மற்றும் அதற்கான அபராத தொகை ஆகியவை தானாக கணக்கீடு செய்யப்பட்டு அதற்கான ரசீதும் அச்சாகி விடும்.

3,010 பேர் பதிவிறக்கம் செய்தனர்

அதன்படி கடந்த 7-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை போலீசாரின் இந்த செயலியை 3 ஆயிரத்து 10 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்களில் 605 பேர் கோவையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிமீறல் பற்றிய புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளனர்.

குறிப்பாக வாகனங்கள் நிறுத்தக் கூடாத இடத்தில் வாகனத்தை நிறுத்துதல், ஹெல்மெட் இல்லாமல் செல்லுதல், இருசக்கர வாகனத்தில் மூவர் பயணித்தல், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துதல், பஸ்சில் படிக்கட்டுகளில் பயணம் செய்தல் போன்ற விதிகளை மீறியவர்களின் புகைப்படங்களை பொதுமக்கள் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் சுஜித்குமார் கூறியதாவது:-

‘போலீசாரின் செயலியை பதிவிறக்கம் செய்தவர்களில் 605 பேர், போக்குவரத்து விதிகளை மீறிய வானங்களின் புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். இதன்மூலம் அந்த வாகன உரிமையாளர்கள் அபராதம் செலுத்துவதற்கான சலான்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்காக 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் போக்குவரத்து விதிகளை மீறியவர்களின் வீடுகளுக்கு சென்று ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 500 அபராத தொகையை வசூலித்தனர். இந்த செயலி பற்றி கோவையில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story