நாடாளுமன்ற தேர்தலில் வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிகளுக்கே ஆதரவு விக்கிரமராஜா பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிகளுக்கே ஆதரவு விக்கிரமராஜா பேட்டி
x
தினத்தந்தி 22 Jan 2019 11:00 PM GMT (Updated: 22 Jan 2019 6:45 PM GMT)

வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிகளுக்கு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்போம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்றார்.

தஞ்சை, திருவாரூர், நாகை நிர்வாகிகள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே மாதம் 5-ந் தேதி 36-வது மாநில மாநாட்டை வணிகர்களின் எழுச்சி மாநாடாக சென்னையில் நடத்த உள்ளோம். மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றவுடன் சாமானியராக இருந்த பிரதமர் மோடி, வணிகர்களை பாதுகாப்பார் என்று நம்பினோம். ஆனால் அவர் பெரும் முதலாளிகளுக்குத்தான் பாதுகாவலராக உள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததால் ஓட்டல் மற்றும் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சில்லரை வணிகத்தில், வணிகர்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை.

தமிழகத்தில் 1 கோடி வணிகர்கள் உள்ளனர். வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிகளை நாங்கள் உற்றுநோக்கி வருகிறோம். அவர்களுக்கே நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிப்போம். தேர்தலுக்கு முன்பு எங்களின் மாநாடு நடந்தால் அந்த மாநாட்டில் நாங்கள் யாருக்கு வாக்களிப்போம் என்பதை அறிவிப்போம்.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அளித்திருந்த கோரிக்கை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பல பொருட்களுக்கு வரி குறைப்பும், ஜி.எஸ்.டி. ரிட்டன் தாக்கல் செய்வதற்கு சலுகையும், கால அவகாசமும் வழங்கி உள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். குட்கா போன்ற புகையிலை பொருட்களை தடை செய்ததில் அரசு வெற்றி பெறவில்லை. வியாபாரிகள், பொதுமக்களை அனுசரித்து தடை செய்தால்தான் அது வெற்றி பெறும். நெருக்கடிகளை அமல்படுத்தினால் அந்த தடை வெற்றி பெறாது.

ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்பினை சட்ட வடிவமாக்கி கடை வைத்திருப்பவர்களுக்கே மீண்டும் கடை என்ற நிலைப்பாட்டை உறுதி செய்ய வேண்டும். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெறும் கண்துடைப்பு. அந்த மாநாட்டிற்கு எங்களைப்போன்ற சாமானியர்களை அழைப்பது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story